மோசடிக்காரர்கள் ஏமாற்றுவதற்கு அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் கருவிகளைப் பயன்படுத்தி போலி உருவங்களையும் குரல் பதிவுகளையும் உருவாக்கி நண்பர்களாகவும் உறவினர் களாகவும் பேசி, நடித்து மோசடிக்காரர்கள் பணத்தைப் பறிக்கின்றனர்.
அதிகாரிகளைப் போலவே அசையும் உருவங்களை உருவாக்க ‘டீப்ஃபேக்’ எனும் தொழில்நுட்பத்தை மோசடிக்காரர்கள் பயன்படுத்தலாம் என்று உள்துறை துணை அமைச்சர் ஷுவெலிங் தெரிவித்தார்.
மோசடிகளுக்கு எதிரான வட்டார மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், பிரபலமானவர்களின் குரல் அல்லது உருவத்தை உருவாக்கி ஏமாற்றப்பட்ட சில வெளிநாட்டுச் சம்பவங்களை சுட்டிக்காட்டினார்.
“இத்தகைய மிரட்டல்களை விழிப்புடன் நாம் கண்காணித்தாக வேண்டும். ஆய்வு நிலையங்கள், சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள், தொழில்நுட்ப நிபுணர்கள் போன்றோருடன் இணைந்து செயல்பட்டு அவற்றை எதிர்கொள்ளும் வழிகளைக் கண்டறிய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் மோசடிகள் அதிகரித்துள்ள வேளையில் அமைச்சரின் கருத்து வெளி யாகியுள்ளது. இதே காரணத்துக்காக சீனா போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் போட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் மங்கோலியாவில் உள்ள ஒரு வட்டாரத்தில் காணொளி மூலம் நண்பரைப்போல பேசி ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட சம்பவத்தில் முகத்தை மாற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை எச்சரித்திருந்தது.
அந்த காணொளியில் நண்பரைப் போல பேசிய உருவம் 4.3 மில்லியன் யுவான் அவசரமாக தேவைப்படுவதாகக் கூறியது. இதனை நம்பிய ஒருவர், 4.3 மில்லியன் யுவானை (S$805,000) மோசடிக்காரர் களுக்கு அனுப்பியுள்ளார்.
இது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று நண்பர் கூறிய பிறகே தாம் ஏமாற்றப் பட்டதை அவர் அறிந்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் குடும்ப உறுப்பினர்கள் போல பேசும் குரல் பதிவுகளைத் தயாரித்து பணம் பறிக்கும் சம்பவங்கள் ஐரோப்பாவிலும் அதிகரித்து வருகின்றன. இது, அவ்வட்டாரத்தில் பெருங்கவலையாக உருவாகியுள்ளது.