பாதுகாப்பு குறைபாட்டால் மரணம் ஏற்படக் காரணமாக இருந்த ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கட்டடத்தின் முகப்பைச் சுத்தம் செய்யும் துப்புரவு ஊழியராகப் பணியாற்றிய சுரேஷ் குமார் சண்முகமும் அவரது சக ஊழியர்களும் 63 மாடிகள் கொண்ட ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ் கட்டடத்தின் மொட்டை மாடியின் தரையிலிருந்து இரண்டு தரை ஓடுகளை அகற்றினர்.
அந்தத் தரை ஓடுகள் நான்கு மீட்டர் ஆழமுள்ள குழிக்கு மேல் போடப்பட்டிருந்தன.
அந்தக் குழிக்குள் கட்டடத்தின் முகப்பைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ‘கொண்டோலா’ வைக்கப்பட்டிருந்தது.
சக ஊழியர்களுக்கு பணி தொடர்பான செய்முறை விளக்கங்களைத் தரும் பொறுப்பில் இருந்த சுரேஷ், வேலை முடிந்ததும் அந்தத் தரை ஓடுகளை எடுத்த இடத்திலேயே வைக்கத் தவறினார்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதியன்று, அக்கட்டடத்தின் மொட்டை மாடியில் உள்ள மதுபானக்கூடத்துக்கு அருகில் இருந்த அக்குழிக்குள் பகுதி நேர பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றிய 26 வயது ஷோன் டுங் மன் ஹோன் விழுந்தார்.
அவருக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது வேலையின்றி இருக்கும் 63 வயது சுரேஷுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

