சிங்கப்பூரில் 13க்கும் மேற்பட்ட பொது நூலகங்களில் கைப்பேசிகளுக்கு மின்னூட்டு செய்யும் மையங்கள் ஜூலை 27ஆம் தேதி முதல் மூடப்படும் என்று தேசிய நூலக வாரியம் வியாழக்கிழமை (ஜூலை 8), சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
கைப்பேசிகளைக் கவனிக்காமல் விட்டுச்சென்றுவிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாலும் மிகையான மின்சாரப் பயன்பாட்டினால் அங்குச் சில நேரங்களில் கோளாறுகள் ஏற்பட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வாரியம் விளக்கியது.
இருப்பினும் ஜூலை 27 முதல் ‘சாரஜ்ஸ்பாட்’ (ChargeSPOT) எனப்படும் கைப்பேசிகளுக்கு மின்தேக்கிகளைக் (பவர்பேங்) கட்டணத்துக்குப் பயன்படுத்தும் சேவை அறிமுகமாகும். அதன்படி பொதுமக்கள் அவற்றை வாடகைக்கு எடுக்கும் வசதி நூலகங்களில் ஏற்பாடு செய்து தரப்படும்.
மின்தேக்கிகளை வாடகைக்கு விடும் நிறுவனமான சார்ஜ்ஸ்பாட் அமைப்பின் இணையப்பக்கத்தில் அதன் சேவை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல் ஒரு மணி நேர வாடகையாக $1.50 வசூலிக்கப்படும். ஒரு நாளுக்கு அதிகபட்சமாக $10 வரை மின்தேக்கிகளைக் கொண்டு கைப்பேசிகளுக்கு மின்னூட்டிக் கொள்ளலாம்.
“வாரிய நூலகங்களில் நூல் வாசிப்புக்கான முன்பதிவுத் திட்டத்தின்படி இதுவரை 1,800 இருக்கைகளுக்கு அருகில் வழங்கப்பட்டுவந்த இலவச மின்னூட்டு மையங்களுக்குப் பதிலாக புதிய வாடகை மின்தேக்கிகள் பயன்படும்,” என்று தேசிய நூலக வாரியம் கூறியது.
மேல் விவரங்களுக்கு சார்ஜ்ஸ்பாட் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அச்செயலியின் வழியாக அந்நிறுவனத்தின் உதவி நிலையத்தையும் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.
கூடுதல் தகவல்கள் அறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம், தேசிய நூலக வாரியத்தையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையையும் தொடர்புகொண்டுள்ளது.

