செங்காங்- பொங்கோல் இலகு ரயில் (எல்ஆர்டி) மேம்பாட்டுப் பணிகள் கட்டங்கட்டமாகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேம்பாட்டுப் பணிகளால் குறிப்பிட்ட அந்த வட்டாரத்தில் உள்ள போக்குவரத்துச் சேவைகள் இன்னும் எவ்வளவு காலம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியிருப்பாளர்களும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
செங்காங் வெஸ்ட் இலகு ரயில்கள் ஆறு மாதங்களுக்கு அதாவது ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 18ஆம் தேதிவரை ஒரே தண்டவாளத்தில்தான் சேவை வழங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் இதற்குமுன் கூறியிருந்தது.
இலகு ரயில் முனையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக அத்தகைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக ஆணையம் சொன்னது. கம்பிகளை வெட்டுவது, தண்டவாளத் தட்டுகளைப் பொருத்துவது போன்ற பல்வேறு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்று அது சுட்டியது.
தற்போதுள்ள இலகு ரயிலின் கான்கிரீட் தண்டவாளங்களும் உடைக்கப்பட்டு மறுவடிவமைக்கப்படவேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.
மே 7ஆம் தேதி, செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம், மேம்பாட்டுப் பணிகளுக்கு ஏன் ஆறு மாதங்கள் தேவைப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்தத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், பணிகள் அனைத்தும் கவனமான, கட்டங்கட்டமாக நிறைவேற்றப்படவேண்டும்,” என்று கூறினார்.
கட்டமைப்பும் தீவிரமாகச் சோதிக்கப்பட்டு அதன் பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும் என்று திரு சியாவ் விளக்கம் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
உச்ச நேரங்களில் செங்காங் பேருந்து முனையத்தில் வார நாள்களில் செயல்படும் பேருந்துச் சேவைகளைப் பயணிகள் பயன்படுத்தலாம் என்றும் திரு சியாவ் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 6,000 பயணிகள் அந்தப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர். பயணிகளுக்கு உதவவும் வழிகாட்டவும் கிட்டத்தட்ட 200 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

