நான்காம் கட்ட தாம்சன் - ஈஸ்ட்கோஸ்ட் ரயில் பாதை பயணிகள் சேவைக்குத் திறக்கப்பட்ட முதல் நாளன்று, பேஷோர் நிலையத்திலிருந்து புறப்பட்ட முதல் ரயிலில் ஏறிய 20 பயணிகளில் ஒருவர் திருவாட்டி கிளெடிஸ் இங்.
இப்போது வேலைக்குச் செல்லும்போது பணத்தைச் சேமிக்கலாம் என்றார் அவர்.
வழக்கமாக தனியார் வாடகை காரில் வேலைக்குச் செல்லும் 55 வயதான அவர், ஒவ்வொரு பயணத்திற்கும் $20 செலவாகும் என்று கூறினார்.
10.8 கிலோமீட்டர் நீளம் கொண்ட நான்காம் கட்ட தாம்சன் - ஈஸ்ட்கோஸ்ட் பாதையில், தஞ்சோங் ரூ, காத்தோங் பார்க், தஞ்சோங் காத்தோங், மரின் பரேட், மரின் டெரஸ், சிக்லாப், பேஷோர் ஆகிய நிலையங்கள் உள்ளன.
அந்த நிலையங்களுக்கு அருகில் உள்ள வர்த்தகங்கள், அதிகரிக்கும் இணைப்பால் தங்கள் வருமானம் கூடும் என்று எதிர்பார்க்கின்றன.
ஏழு புதிய நிலையங்கள் ஜூன் 21ஆம் தேதி முன்னோட்டமாக பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டன. அங்கு ஏறக்குறைய 380,000 பேர் திரண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வர்த்தகத்தில் அதிகரிப்பைக் கண்டதாக வீடமைப்புப் பேட்டைகளில் தொழில் நடத்துவோர் கூறினர்.

