மாற்றான் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 11 வயது சிறுமி ஒருவர், அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தைச் சமாளிக்கத் தனது மணிக்கட்டைப் பலமுறை வெட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றத்தைப் புரிந்த 30 வயது மாற்றான் தந்தைக்கு மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதச் சிறைத் தண்டனையும் ஏழு பிரம்படிகளும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) விதிக்கப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட இரு மானபங்கக் குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
தண்டனை வழங்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்றொரு மானபங்கக் குற்றச்சாட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் விவரங்களைப் பாதுகாக்கக் குற்றவாளியின் பெயரைக் குறிப்பிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அந்த ஆடவருடன் இருக்கும் திருமணப் பந்தத்தைத் தொடர்வதாகவும் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் இக்குற்றத்தை 2023ஆம் ஆண்டு புரிந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடவருக்குப் பிணைத்தொகையாக $20,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


