சிங்கப்பூரில், சிறுமி ஒருவரைப் பாலியல் ரீதியான நடவடிக்கையில் ஈடுபடுத்திய குற்றத்திற்காகச் சீர்திருத்தப் பயிற்சியை மேற்கொள்ளும்படி முன்னாள் ஆசிரியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிவாசலில் பழக்கமான 12 வயது சிறுமியிடம் 20 வயது ஆடவர் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் அடையாளம் தெரியாமல் இருக்க, குற்றவாளியின் பெயர் போன்ற விவரங்கள் வெளியிடவில்லை.
சிறுமியிடம் முறைகேடான வகையில் நடந்துகொண்ட குற்றத்தை ஆடவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புக்கொண்டார்.
2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிறுமியின் சமய ஆசிரியராக இருந்த குற்றஞ்சாட்டப்பட்ட நபர், ஐந்திலிருந்து ஆறு மாணவர்கள் கொண்ட வகுப்புகளில் பாடம் கற்பித்தார்.
அங்கு, அனைவரின் தனிப்பட்ட விவரங்களையும் பெற்ற அவர், கைப்பேசியில் ‘சேட்’ குழு ஒன்றைத் தொடங்கினார்.
குறிப்பிட்ட ஒரு நாளன்று பாடம் முடிந்தபின் சிறுமிக்கு மதிய உணவும் சாக்லட்டும் அந்த ஆடவர் வாங்கிக் கொடுத்தார். சிறுமி, அதுகுறித்து தமது தாயிடம் கூறியதை அடுத்து சிறுமியின் தாய் பள்ளிவாசலுக்கு அதுபற்றி தெரிவித்தார். அதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர், பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.
எனினும், சிறுமியும் ஆடவரும் ஒருவரை ஒருவர் விரும்பியதாக அறியப்படுகிறது. புளோக்கின் கார் நிறுத்துமிடம், படிக்கட்டுகள் போன்ற இடங்களில் அவர்கள் அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர்.
அப்போது பாலியல் ரீதியாக அந்த ஆசிரியர் நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியருக்கும் சிறுமிக்கும் இடையிலான உறவு முறிந்ததை அடுத்து சிறுமி நடந்தவற்றை தாயிடம் கூறினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறுமியின் தாயார் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

