ஷெங் சியோங் நிறுவனம் அதன் பேரங்காடிகளில் உள்ள பேநவ் (PayNow) மூலம் பணம் எடுக்கும் முறையை அண்மையில் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அந்த நடவடிக்கையை எடுத்ததாக நிறுவனம் சொன்னது.
பேரங்காடிகளில் உள்ள தானியக்க இயந்திரங்களில் (ATM) பேநவ் குறியீட்டைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஒருவரால் $1,000 ரொக்கத்தை எடுக்க முடியும்.
ஆனால் இம்மாதத் தொடக்கத்தில் கள்ளத்தனமாகப் பெறப்பட்ட பணத்தை நல்ல பணமாக்க அந்தத் தானியக்க இயந்திரங்களைச் சிலர் பயன்படுத்தியதை அடுத்து ஷெங் சியோங் ஜூன் 19ஆம் தேதி தானியக்க இயந்திரங்களின் செயல்பாடுகளை நிறுத்தியது.
அதையடுத்து இம்மாதம் 23ஆம் தேதி இயந்திரங்கள் வழக்கம்போலச் செயல்பட்டன.
சிங்கப்பூர் எங்கும் உள்ள தானியக்க இயந்திரங்களிலிருந்து ஜூன் 18ஆம் தேதி ஒரே பேநவ் கணக்கு மூலம் மிகப் பெரிய தொகை எடுக்கப்பட்டதை அடுத்து புதிய மோசடிக் குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதே பேநவ் கணக்கைக் கொண்டு ஜூன் 19ஆம் தேதி கூடுதல் ரொக்கம் எடுத்த நபரைப் பேரங்காடி ஊழியர்கள் தடுத்து வைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஷெங் சியோங் குழுமத்திற்குத் தீவெங்கும் 60க்கும் அதிகமான தானியக்க இயந்திரங்கள் உள்ளன.
சம்பவம் தொடர்பில் ஜூன் 21ஆம் தேதி நான்கு ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் 16 வயதிலிருந்து 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் டெலிகிராம் செயலியில் வந்த ‘துரிதமாகப் பணம் தரும் வேலை’ தொடர்பில் வந்த விளம்பரத்தைப் பார்த்து செயல்பட்டனர் என்று நம்பப்படுகிறது.
அவர்கள் ஷெங் சியோங் பேரங்காடிகளில் உள்ள தானியக்க இயந்திரங்களுக்குச் சென்று பேநவ் குறியீட்டைப் பெற்று அதை டெலிகிராம் குழுவில் பகிரவேண்டும்.
சிறிது நேரத்துக்குள் தானியக்க இயந்திரத்திலிருந்து வரும் பணத்தை ஆடவர்கள் மற்றொருவரிடம் கொடுக்கவேண்டும். ஜூன் 26ஆம் தேதி காவல்துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் செங்காங், தெம்பனிசில் உள்ள தானியக்க இயந்திரங்களுக்கு அழைத்துச்சென்றனர்.
முகம்மது நொரைடில்சாஹிக் முகம்மது நொரசிஃப், 20, $8,000 ரொக்கம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
முகம்மது இஸ் இர்யான் மொட் அலி, 23, குற்றச் செயல் மூலம் $20,300 பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஷெங் சியோங் நிறுவனம் ஒரே பேநவ் கணக்கைக் கொண்டு அதிகபட்சம் $5,000 வரை மட்டுமே எடுக்கும் நடைமுறையாக மாற்றியது.