ஷெங் சியோங் பேரங்காடி நிறுவனம் ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரத்தில் அதன் முதல் கடையைத் திறக்கவிருக்கிறது. கேத்தே கடைத்தொகுதியில் புதிய கடை அமைந்திருக்கும்.
6.500 சதுர அடியைக் கொண்ட அந்தக் கடை இம்மாத (ஆகஸ்ட் 2025) இறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் பேரங்காடியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
“ஷெங் சியோங்கிற்குத் தேக்கா வட்டாரத்தில் ஏற்கெனவே ஒரு கிளை இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் மத்திய வட்டாரத்தில் ஒரு கடை வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர்,” என்றார் பேச்சாளர்.
கேத்தே கடைத்தொகுதியைச் சுற்றிலும் புதிய புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. அன்றாடம் மளிகைப்பொருள்களை வாங்குவதற்கு அந்தக் கடை உதவியாக இருக்கும் என்று தாங்கள் கருதுவதாக அவர் சொன்னார்.
மே மாதம் கடையில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறுவது தெரியவந்தது. ரெடிட்டைப் பயன்படுத்தும் ஒருவர், கடைத்தொகுதியின் முதல் கீழ்த்தளத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளைப் படம் பிடித்துப் பதிவிட்டார் .
ஷெங் சியோங் இணையத்தளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நாட்டில் 82 கிளைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன.
பேரங்காடியின் நிகர லாபம் இவ்வாண்டின் முதல் காலாண்டு முடிவில் 6.1 விழுக்காடு அதிகரித்து $38.5 மில்லியனைத் தொட்டது. சென்ற ஆண்டு அதே காலகட்டத்தில் நிகர லாபம் $36.3 மில்லியனாக இருந்தது.