ஆசியாவில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை கப்பல்களில் 95 கடற்கொள்ளைகளும் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களும் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 83 விழுக்காடு அதிகமாகும் என்று அனைத்துலகக் கடற்கொள்ளைகளுக்கு எதிரான அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான சம்பவங்கள் மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைப் பகுதியில் நிகழ்ந்துள்ளது கவனிக்கத்தக்கது என்று அந்த மையம் சுட்டியது. அந்தக் கடற்பகுதியில் 2024ன் முதல் பாதியில் நடந்த 21 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் முதல் காலாண்டின் 80 சம்பவங்கள் அதிகமாகும்.
மலாக்கா, சிங்கப்பூர் நீரிணை சம்பவங்களில் பெரும்பாலானவை கடுமையானவை அல்ல. 90 விழுக்காடு சம்பவங்களில் கப்பல் சிப்பந்திகள் எவரும் காயமடையவில்லை. 80 சம்பவங்களில், பாதி சம்பவங்களில் எதுவும் திருடப்படவில்லை. 29 விழுக்காட்டுச் சம்பவங்களில், தாக்குதல் நடத்தியவர்கள் உபரி எஞ்சின்களை எடுத்துச் சென்றனர்.
பத்தில் ஒன்பது சம்பவங்கள் இருட்டிய பின்னர் நடந்ததாக ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை, ஆயுதமேந்திய கொள்ளைகளைத் தடுக்கும் வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டைக் குறிக்கும் ‘ரெக்காப்’பின் (ReCaap) தகவல் நிலையம் தெரிவித்தது.
கிட்டத்தட்ட பாதி தாக்குதல்கள், பெரியளவிலான சரக்குக் கப்பல்கள் மீதும், கால்வாசி எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீதும் நடத்தப்பட்டதாக தகவல் நிலையம் தெரிவித்தது.
குற்றவாளிகளைக் கைது செய்ய, கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி நிகழும் இடங்களில் இவ்வட்டார அதிகாரிகள் தங்கள் இருப்பை அதிகரிக்க வேண்டும் என்று ‘ரெக்காப்’ தகவல் பகிர்வு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் திரு விஜய் டி சஃபெகர் கூறினார்.
ஆபத்துள்ள பகுதிகளைக் கடந்துசெல்லும்போது கப்பல் தலைவர்கள் இரவில் கப்பல் தளத்தில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும், அனுமதியின்றி கப்பலில் ஏறுவோரைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.