குடியிருப்புச் சொத்து வாங்குவோருக்கான கூடுதல் முத்திரை வரி உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், வர்த்தகக் கடைவீடுகளின் விற்பனை இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில், 43 கடைவீடுகள் மொத்தம் $414 மில்லியனுக்குக் கைமாறின. முந்திய காலாண்டில் விற்பனையான 32 கடைவீடுகளைவிட இது அதிகம் என்று புராப்நெக்ஸ் நிலச்சொத்து நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை காட்டுகிறது.
பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பும் 40 விழுக்காடு உயர்ந்துள்ளது.
லிட்டில் இந்தியா, ஜாலான் புசார் வட்டாரங்களில் உள்ள கடைவீடுகளே தொடர்ந்து அதிகமாக விற்பனையானதாக புராப்நெக்ஸ் தெரிவித்தது. 2023 இரண்டாம் காலாண்டில் இந்த வட்டாரங்களில் $140 மில்லியன் பெறுமானமுள்ள 18 கடைவீடுகள் கைமாறின.
இதற்கு அடுத்தபடியாக, கேலாங், யூனோஸ் வட்டாரத்திலும், இராஃபிள்ஸ் பிளேஸ், சிசில் ஸ்திரீட் வட்டாரத்திலும் தலா ஆறு கடைவீடுகள் விற்பனையாயின.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம், வர்த்தகச் சொத்து வாங்குவோருக்கான முத்திரை வரி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, முதல் காலாண்டில் கடைவீடுகளில் ஆர்வம் சற்று குறைவாக இருந்தது.
ஆனால், ஏப்ரல் மாதக் கடைசியில் குடியிருப்புச் சொத்து வாங்குவோருக்கான கூடுதல் முத்திரை வரி உயர்த்தப்பட்டதால், முதலீட்டு ஆர்வம் வர்த்தகக் கடைவீடுகளின்பக்கம் திரும்பியது. இதனால், கடைவீடுகளின் விற்பனை மீண்டும் அதிகரித்ததாக புராப்நெக்ஸ் கூறியது. வர்த்தகச் சொத்துகளுக்குக் கூடுதல் முத்திரை வரி கிடையாது.
இரண்டாம் காலாண்டில் கடைவீடுகளின் விற்பனைச் சந்தையில் வசதிபடைத்த தனிநபர்களும் குடும்ப அலுவலகங்களும் ஆதிக்கம் செலுத்தியதாக செவில்ஸ் சிங்கப்பூர் நிலச்சொத்து நிறுவனம் ஜூலை 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
மற்றொரு நிறுவனமான நைட் ஃபிராங்க் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, 2023 முதல் பாதியில் மொத்தம் 75 கடைவீடுகள் கைமாறின. சென்ற ஆண்டின் இரண்டாம் பாதியில் 72 கடைவீடுகள் விற்பனையாயின.
2023 முதல் பாதியில் விற்பனையான கடைவீடுகளின் மொத்த மதிப்பு $711.6 மில்லியன். இது சென்ற ஆண்டு இரண்டாம் பாதியின் $663.5 மில்லியனைவிட அதிகம். ஆனால், சென்ற ஆண்டு முதல் பாதியில் மொத்தம் $962.8 மில்லியனுக்குப் பரிவர்த்தனையான 119 வீடுகளைவிட இது குறைவு.
இரண்டாம் காலாண்டில் ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட கடைவீடு போட் கீயில் உள்ளது. இந்த 999 ஆண்டு குத்தகையுள்ள கடைவீடு $30 மில்லியனுக்கு விற்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, கேலாங் சாலையில் உள்ள ஒரு ஜோடி முற்றுரிமை கடைவீடுகள் ஜூன் மாதம் $30 மில்லியனுக்கு விற்கப்பட்டன.
2023 முதல் பாதியில் விற்பனையான கடைவீடுகளில் 78.7 விழுக்காடு அல்லது 59 கடைவீடுகள் 999 ஆண்டு குத்தகை அல்லது முற்றுரிமை உள்ளவை என்று நைட் ஃபிராங்க் தெரிவித்தது.
இதற்கிடையே, இவ்வாண்டின் முதல் பாதியில் அதிகமான கடைவீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும் புராப்நெக்ஸ் கூறியது. மொத்தம் $19 மில்லியன் பெறுமானமுள்ள 1,825 வாடகை பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. இது 2022 இரண்டாம் பாதியின் 1,814 பரிவர்த்தனைகளைவிட அதிகம்.
“கடைவீடு சந்தை வலுவாக இருப்பதற்கு கூடுதல் முத்திரை வரி உயர்வு மட்டுமே காரணமல்ல. சில்லறை விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டதால், வர்த்தகச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என்று ஹட்டன்ஸ் ஏஷியா நிறுவனத்தின் மூத்த குழும இயக்குநர் ஜெரமி லிம் கூறினார்.
கேலாங் வட்டாரம் மக்கள் கூட்டத்தை ஈர்த்து வருவதால், கடந்த சில மாதங்களாக கேலாங் கடைவீடுகள்மீது சிங்கப்பூர் முதலீட்டாளர்களின் ஆர்வம் கூடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உணவு, பானத் தொழில் நடத்தும் சிங்கப்பூரர்களும், கவர்ச்சியான இடங்களில் உள்ள கடைவீடுகளுக்கு ஈர்க்கப்படுவதாக நைட் ஃபிராங்க் கூறியது. இவ்வாண்டு முழுவதற்கும் கடைவீடுகளின் விற்பனை $1.3 பில்லியன் முதல் $1.5 பில்லியன் வரை எட்டும் என்று நைட் ஃபிராங்க் எதிர்பார்க்கிறது.