கடந்த ஜனவரி மாதம் விமான நிலைய துணைப் பேருந்துச் சேவை வழங்கிய பேருந்து ஓட்டுநரிடம் மிரட்டும் வகையில் நடந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது வெள்ளிக்கிழமை (மார்ச் 14) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஸூ யிஸுவென் எனும் அந்த ஆடவர், ஜனவரி 31ஆம் தேதியன்று சாங்கி விமான நிலைய ஒன்றாம் முனையத்தில் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகளுக்கான பகுதியில் இருந்தார். அன்றைய தினம் அவர் துணைப் பேருந்துச் சேவை வழங்கிவந்த பேருந்தை வழி மறித்ததாக நம்பப்படுகிறது.
மிரட்டும் வகையில் அவர் அந்தப் பேருந்தை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ‘ஏர்ப்போர்ட் புலவார்ட்’ எனும் விமான நிலைய வளாகத்தில் அந்தப் பேருந்து சாலைத் தடத்தை மாற்றிக்கொண்டதால் ஸூ ஆத்திரமடைந்ததாக காவல்துறை தெரிவித்தது.
30 வயது தனியார் வாடகை கார் ஓட்டுநரான ஸூ, பேருந்தைப் பின்தொடர்ந்து தனது வாகனத்தை வைத்துப் பேருந்தை மறித்ததாக நம்பப்படுகிறது. பிறகு அவர் தனது வாகனத்திலிருந்து இறங்கி பேருந்து ஓட்டுநரிடம் சைகைகள் காட்டியும் தகாத வார்த்தைகளைக் கொண்டும் இழிவுபடுத்தியதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
ஸூ, பேருந்தின் முன்கதவை உதைத்ததாகவும் தனது கைப்பேசியைப் பேருந்தின் மீது வீசியதாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்களுக்குத் தொந்தரவு இழைத்ததாகவும் அரசாங்க ஊழியரை மிரட்டும் வகையில் நடந்துகொண்டதாகவும் ஸூ மீது வெள்ளிக்கிழமையன்று மொத்தம் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

