சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் A380 ரக விமானம், புதன்கிழமை (ஏப்ரல் 22) சாங்கி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.
விமானம் புறப்படுவதற்கு முன்னதாக, உணவு எடுத்துச் செல்லும் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக விமானத்தின் எந்திரம்மீது மோதியது. அதன் காரணமாக விமானம் பழுதடைந்ததால், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
விபத்தினால் சிங்கப்பூரிலிருந்து ஃபிராங்ஃபர்ட் செல்லவேண்டிய SQ326 ரக விமானம் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2.13 மணிக்குப் புறப்பட்டு, ஜெர்மனியில் ஃபிராங்ஃபர்ட் நகரை இரவு 8.40 மணிக்குச் (அந்த நகரின் நேரப்படி) சென்றடைந்ததாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரையில் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்பதால், தாமதமாகச் சென்ற விமானத்தால் மீண்டும் குறித்த நேரத்திற்குள் புறப்பட முடியாமல் போனது. அதனால், ஃபிராங்ஃபர்ட்டிலிருந்து சிங்கப்பூர் திரும்பவேண்டிய SQ325 ரக விமானம் ரத்து செய்யப்பட்டதாக எஸ்ஐஏ தெரிவித்தது.
சம்பவம் நடந்தபோது விமானத்தில் பயணிகள் எவரும் இருக்கவில்லை என்றும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 452 பயணிகளுக்கும் உணவு, தங்குமிட வசதிகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செய்து கொடுத்தது.
அந்த எதிர்பாராத இடையூறுக்கு எஸ்ஐஏ மன்னிப்புக் கேட்டதுடன் பயணிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து சாங்கி விமான நிலையக் குழுமம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

