சிம்பிலிகோ செயலி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6ஆம் தேதி) அன்று மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிம்பிலிகோ செயலியில் தற்பொழுது பணம் நிரப்புதல், பழைய ஈஸிலிங்க் அட்டைகளின் பயன்பாட்டை ஒருவர் தனது கைப்பேசி வழி தடுக்கும் வசதி போன்றவை உள்ளது.
மேம்படுத்தப்பட்ட செயலியில் பொருள்களை மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை மூலம் வாங்குவது, இணையம் வழி பொருள்களை வாங்குவது போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம். அத்துடன், சாலை மின் கட்டணம், கார் நிறுத்தக் கட்டணம் போன்றவற்றுக்கு உள்ளூரில் விநியோகிக்கப்படும் மாஸ்டர், விசா அட்டைகள் கட்டணம் செலுத்தும் வசதியை ஈஸிலிங் மோட்டரிங் சர்விஸ் மூலம் புதிய செயலி இணைக்கிறது.
டிரான்சிட் லிங்க், ஈஸிலிங்க் செயலிகள் ஒரே செயலியில் செப்டம்பர் 1ஆம் தேதி இணைத்து ஐந்து நாள்கள் ஆன நிலையில், ஈஸிலிங்க், டிரான்சிட்லிங்க், சிம்பிலிகோ செயலிகள் அனைத்தும் தற்பொழுது ஒரே செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.
புதிய மேம்பட்ட சிம்பிலிகோ செயலியில் பழைய ஈஸிலிங்க் அட்டைகளில் பணம் நிரப்ப வேண்டுமாயின் அதிலுள்ள ‘ என்எஃப்சி எனப்படும் நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (Near Field Communication - NFC) வசதியை தங்கள் கைப்பேசியில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பின்னர் தங்களுடைய ஈஸிலிங்க் அட்டையை கைப்பேசியில் தட்ட வேண்டும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஈஸிலிங்க் அட்டைகளில் தானியக்க முறையில் பணம் நிரப்பும் வசதியையும் செயல்படுத்தலாம். இதன் மூலம் ஒருவர் தனது ஈஸிலிங்க அட்டையின் பாக்கி $3 என்ற நிலையை எட்டும்போது அவர் தான் விரும்பும் தொகையை, தேர்வு செய்யும் கட்டண வகைக்கு ஏற்ப அதில் நிரப்பிக் கொள்ளலாம்.
பழைய ஈஸிலிங்க் அட்டைகளை ஒருவர் கைத்தவறி வைத்துவிட்டாலோ, தொலைத்து விட்டாலோ பிறர் அதைப் பயன்படுத்துவதையும் செயலியைக் கொண்டு தடை செய்யலாம்.