சிங்கப்பூரின் பத்தாவது விமானக் கண்காட்சி அதிகாரபூர்வமாகச் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) தொடங்கியது.
உலக நாடுகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான வர்த்தகப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
சிங்கப்பூரில் விமானப் போக்குவரத்து, விண்வெளித் துறைகளில் தொடர்ச்சியான ஒப்பந்தங்களையும் நீண்டகால முதலீடுகளையும் மேற்கொள்வதற்கு அக்கண்காட்சி ஒரு திறவுகோலாக அமைந்துள்ளது.
விமானப் பொறிகள் (engine) தயாரிக்கும் நிறுவனமான ‘ஜிஇ’ ஏரோஸ்பேஸ், அமெரிக்காவின் பெருநிறுவனமான விண்வெளி, தற்காப்பு ஒன்றிணைந்த ஆர்டிஎக்ஸ், பொறி உற்பத்தியாளர் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls- Royce), விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான தேல்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களும் அதில் அடங்கும்.
சிங்கப்பூர் விமான, விண்வெளித் துறை மேம்பாட்டிற்கான முக்கிய ஒப்பந்தங்கள்
கண்காட்சி தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 3ஆம் தேதி, சிங்கப்பூரில் அதன் பொறிகளைப் பழுதுபார்க்கும் திறன்களை ஆதரிக்க, ‘ஜிஇ’ ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஐந்தாண்டுகளில் $300 மில்லியன்வரை முதலீடு செய்கிறது.
அதன் மூலம் மேம்பட்ட தானியக்கம், மின்னிலக்க மயமாக்கல், செயற்கை நுண்ணறிவுடன்கூடிய மேற்பார்வை தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒன்றிணைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அந்த மேம்பாடுகள் பொறிகளைப் பழுதுபார்க்கும் செயல்பாடுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் பழுது நீக்குவதற்கான நேரத்திலும் முன்னேற்றம் ஏற்படும் என அது தெரிவித்தது.
சிங்கப்பூரில் அமெரிக்க நிறுவனமான ‘ஆர்டிஎக்ஸ்’ $139 மில்லியன் முதலீடு செய்யவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்துடன் அந்நிறுவனம் பல உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் முன்னணி விண்வெளி நடுவமாகச் சிங்கப்பூர் உருவெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அந்த ஒப்பந்தங்கள் வலுசேர்க்கின்றன.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பொருளியல் வளர்ச்சிக் கழகம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் ஒன்றை அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
இது மின் அமைப்பு பயன்பாடுகளில் ‘ஏஐ’ பயன்பாட்டை அதிகரிக்கும்.
தேல்ஸ் நிறுவன விமானப் பயண பொழுதுபோக்கு தளமான ‘ஃபிளைட்எட்ஜ்’ (FlytEDGE), அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அதன் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிலையங்களை அமைந்துள்ளது.
விரைவில், அந்த வரிசையில் மூன்றாவதாகச் சிங்கப்பூர் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான மூன்று ஒப்பந்தங்கள் சிங்கப்பூர் விமானக் கண்காட்சியின் முதல் நாளில் கையெழுத்தாகின.

