சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் அருமையான உறவு, ஓர் அடையாளமாகத் திகழ்கிறது என்றும் அது வட்டார நாடுகளுக்கு முன்மாதிரியான ஒன்று என்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிடம் நேற்று தெரிவித்தார்.
இரு தலைவர்களும் பெய்ஜிங்கில் மக்கள் மாமண்டபத்தில் நேற்று சந்தித்தனர்.
வெளிநாட்டுத் தலைவர்களிலேயே திரு லீ அடிக்கடி சீனாவுக்கு வருகை அளிக்கும் ஒரு தலைவராக இருக்கிறார் என்பதை திரு ஸி சுட்டினார்.
சீனாவில் அண்மைய நாடாளுமன்றக் கூட்டத்தை அடுத்து புதிய அரசாங்கம் அமைந்தது. சீனாவுக்கு வருகை அளிக்கும்படி பிரதமர் லீக்கு உடனேயே அழைப்பு விடுக்கப்பட்டது.
“சீனா தன்னுடைய வட்டார அரசதந்திர நடைமுறையில் சிங்கப்பூருக்கு எப்போதுமே முன்னுரிமை அளித்து வந்திருக்கிறது என்பதற்கு இது தெள்ளத்தெளிவான ஓர் எடுத்துக்காட்டு.
“இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட சிறப்புத் தன்மை வாய்ந்த, அணுக்க நட்புறவை இது பிரதிபலிக்கிறது,” என்று சீன அதிபர் குறிப்பிட்டார்.
சீனாவுக்கு வருகை அளித்து பழைய நண்பர்களைச் சந்தித்து, புதிய நண்பர்களை உருவாக்கிக்கொண்டு ஆகப் புதிய நிலவரங்களைப் பற்றி அறிந்துகொள்ள தமக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் கூறினார்.
கொரோனா காலத்திலும் சிங்கப்பூரும் சீனாவும் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட்டு, ஒன்று மற்றொன்றுக்கு ஆதரவாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய திரு லீ, அதன் மூலம் இரு நாட்டு உறவு இன்னும் வலுவாக ஆனது என்றார்.
சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளும் சீனாவுன் பொருளியல் உறவை மேம்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக உள்ளன என்று கூறிய திரு லீ, தமது வருகை இரு தரப்பு ஒத்துழைப்பிற்கும் உயர்நிலைச் சந்திப்புகளுக்கும் புதிய ஊக்கம் கொடுக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.