மாறிவரும் உலகினில் தொடர்ந்து பெருகிவரும் பல சவால்கள், தொழில்நுட்ப இடையூறுகள், புதிய எதிர்ப்புகளைச் சமாளிக்க புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
புதிய சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூர் ஆயுதப்படை தொடர்ந்து தயார்நிலையில் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் சான் சுங் சிங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் ராணுவம், சிங்கப்பூர் கடற்படை, மின்னிலக்க, உளவுத்துறைச் சேவை ஆகியவற்றின் உயர் தயார்நிலைப் பிரிவுகளை செவ்வாய்க்கிழமை (மே 27) பார்வையிட்ட திரு சான், நீ சூன் முகாமில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“இன்றைய சவால்களுக்கு மட்டும் திட்டமிடுவது மட்டுமல்லாமல் எதிர்காலத் திட்டமிடலும் சிங்கப்பூர் ஆயுதப்படைக்கு முக்கியமானது,” என்றார் திரு சான்.
செம்பவாங் கோல்ஃப் கிளப் மன்றத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஆகாயப்படையின் ‘ரோவர் பயிற்சி’ எனும் வெளிப்புற வானூர்தி செலுத்தும் பயிற்சிக்கும் திரு சான் வருகை அளித்தார். இந்தப் பயிற்சியின்வழி வான்வழித் தாக்குதல்களை ஆகாயப்படை எவ்வாறு கையாள்கிறது என்பதை அவர் பார்வையிட்டார்.
சிங்கப்பூரின் நீர்ப் பரப்பளவில் ஏற்படக்கூடிய தாக்குதல்களை எதிர்கொள்ள கடற்படையின் கடல்சார் பாதுகாப்புப் பணிக்குழுவால் நடத்தப்பட்ட தயார்நிலைப் பயிற்சியிலும் அவர் கலந்துகொண்டார்.
அவருடன் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, தற்காப்பு துணை அமைச்சர் டெஸ்மண்ட் சூ வந்திருந்தனர்.
புதிய அமைச்சரவையில் தற்காப்பு அமைச்சில் பொறுப்பேற்ற பிறகு மூவரும் ஆயுதப்படைப் பிரிவுகளை முதல்முறையாகப் பார்வையிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அன்றாடம் நிலவும் அமைதி, சிங்கப்பூர் ஆயுதப்படையின் பணிக்கு ஒரு சான்று என்று தெரிவித்த திரு சான், அதன் தற்காப்பு மேம்பாடுகளைப் பாராட்டினார்.
எதிர்பாராத சவால்களைச் சந்திக்கத் தயாரக இருப்பது அவசியம் என்று வலியுறுத்திய அவர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல்களையும் அதன் பிறகு ஏற்பட்ட தற்காப்பு விழிப்புணர்வையும் சுட்டிக்காட்டினார்.
“நம்முடைய மேம்பாடுகள் சில புதியவையாக இருந்தாலும் எதிர்வரும் எந்த ஒரு சவாலையும் சரிவர எதிர்கொள்ள நாளடைவில் அவை செயல்பாட்டுக்கு வரும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.