சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையைக் குறிப்பிடும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு (எஸ்டிஐ) முதன்முறையாக 4,000 என்ற மைல்கல்லைத் தொட்டது.
வெள்ளிக்கிழமை (மார்ச் 28) பங்கு வணிக நடவடிக்கைகள் தொடங்கியதும் 4,005.18 என்ற நிலையை எஸ்டிஐ எட்டியதாகச் சிங்கப்பூர்ப் பங்குச்சந்தை (எஸ்ஜிஎக்ஸ்) தரவுகள் காட்டின. ஆயினும், நாளின் இறுதியில் அது 3,972.43 என முடிந்தது.
எஸ்டிஐ குறியீடு மார்ச் 27ஆம் தேதி வியாழக்கிழமை 3,991 என ஏற்றம் கண்டதே முன்னைய உச்சநிலை.
இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை 9.02 மணிக்கு எஸ்டிஐ குறியீடு 4,005.18 என்ற நிலைக்கு உயர்ந்தது என்றும் 24.9 மில்லியன் பங்குகள் கைமாறின என்றும் ‘ஷேர்இன்வெஸ்டர்’ தரவுகள் குறிப்பிட்டன.
குறிப்பாக, நிதி நிர்வாக நிறுவனமான ‘யாங்ஸியாங் ஃபைனான்சியல்’ பங்குகள் அதிகமாகக் கைமாறின.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் எஸ்டிஐ குறியீடு ஏற்றம் கண்டுவருவதில் எஸ்டி எஞ்சினியரிங், செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றன என்று எஸ்ஜிஎக்ஸ் சந்தை உத்தியியலாளர் ஜெஃப் ஹவி தெரிவித்துள்ளார்.