சிங்கப்பூர், இந்தியக் கடற்படைகள் ஐந்து நாள் கூட்டுப் பயிற்சியை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) நிறைவுசெய்துள்ளன.
இரு நாடுகளின் கப்பல்களும் சிங்கப்பூர் ஆகாயப் படையின் விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டன.
சிம்பெக்ஸ் (Simbex) எனும் சிங்கப்பூர்-இந்தியா கடல்துறை இரு தரப்புப் பயிற்சி, ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா-சாங்கி கடற்படைத் தளத்தின் கரையோரத்திலும் தென் சீனக் கடலின் தென் பகுதியிலும் நடைபெற்றதாகச் சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்தது.
சிம்பெக்ஸ் பயிற்சி 32வது முறையாக நடைபெறுகிறது. அந்தப் பயிற்சி முதன்முதலில் 1994ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
சிங்கப்பூரும் இந்தியாவும் அவற்றுக்கு இடையில் அரசதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நேரத்தில் பயிற்சி இடம்பெற்றுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
கூட்டுத் திட்டமிடுதல், பாவனைப் பயிற்சி, நிபுணத்துவப் பரிமாற்றங்கள், விளையாட்டுகள் முதலியவற்றில் இரு நாடுகளின் கடற்படையினரும் பங்கெடுத்தனர்.
சிம்பெக்ஸ் பயிற்சி சிறந்த முறையில் நிறைவுற்றது சிங்கப்பூர், இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் நீடிக்கும் நல்லுறவை எடுத்துக்காட்டுவதாகத் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

