சிங்கப்பூரின் ஊழியர் சந்தை இவ்வாண்டின் முதல் காலாண்டில் தொடர்ந்து விரிவடைந்துள்ளது. வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு குறைந்துவருவது நிறுவனங்கள் சற்றுக் கவனத்துடன் செயல்படுவதைக் காட்டுகிறது.
வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைவாகவும் பரந்துபட்ட அளவில் நிலையாகவும் இருக்கிறது.
ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதம் 2.1 விழுக்காட்டுக்குக் கூடியது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பதிவான 2 விழுக்காட்டைவிட இது சற்று அதிகம்.
குடிமக்களைப் பொறுத்தவரை, வேலையின்மை விகிதம் 3.1 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது. ஒப்புநோக்க, முந்திய காலாண்டில் அது சற்றுக் குறைவாக 3 விழுக்காடாய் இருந்தது.
மனிதவள அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 30) வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலைகளின் எண்ணிக்கை ஆண்டின் முதல் காலாண்டில் 5,000 கூடியது. வேலைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, தொடர்ந்து 18வது காலாண்டாக வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் கூடிய 2,300 வேலைகளைக் காட்டிலும் இது அதிகம். ஆயினும், சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வேலைகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் மூன்று மாதத்தில் வெகுவாகக் குறைந்தது. கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் 17,700 வேலைகள் அதிகரித்தன.

