பாசிர் பாஞ்சாங் கப்பல் முனையத்தில் இனி இரவு வேளையில் ‘பார்ஜஸ்’ படகுகளில் கொள்கலன்களை இடம் மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சராசரியாக 300 டிஇயு அளவிலான கொள்கலன்களை ஏந்திச் செல்லக்கூடிய ‘பார்ஜஸ்’ படகுகளுக்கு இது பொருந்தும். கூடுதல் சரக்குகளை விரைவில் கையாள வகைசெய்யும் நோக்குடன் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முன்னதாக பிரானி, கெப்பல் முனையங்களில் மட்டும்தான் இரவில் படகுகளில் கொள்கலன்களை இடம் மாற்ற அனுமதி இருந்தது. பாசிர் பாஞ்சாங் முனையத்தில் இடம்பெறும் கப்பல் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் அவ்விரு முனையங்களிலும் கப்பல் போக்குவரத்து அதிக சிக்கலின்றி இருப்பது அதற்குக் காரணம் என்று சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் புதன்கிழமையன்று (செப்டம்பர் 4) தெரிவித்தது.
பாசிர் பாஞ்சாங் முனையத்தில் இரவு ஏழு மணி முதல் மறுநாள் காலை 6.30 மணி வரை படகுகளில் கொள்கலன்களை இடம் மாற்றத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை உடனடியாக அகற்றப்படுகிறது.
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையமும் பிஎஸ்ஏ சிங்கப்பூரும் இணைந்து நான்கு மாதச் சோதனை மேற்கொண்ட பிறகு தடை அகற்றப்பட்டுள்ளது.