சிங்கப்பூரரின் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத்தில் பொது மக்கள் தங்கள் பெயர்களைச் சரிபார்க்கலாம்.
வாக்காளர்கள் பதிவேடுகளைப் புதுப்பிக்குமாறு பிரதமர் லாரன்ஸ் வோங் பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருத்தங்கள் ஏப்ரல் முதல் தேதிக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 22ம் தேதி) தேர்தல் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பிப்ரவரி முதல் தேதி நிலவரப்படி வாக்களிக்கத் தகுதி பெறும் அனைத்து சிங்கப்பூர் குடிமக்களின் பெயர்களும் இருக்கும்படி சரிபார்க்கப்படும்.
நவம்பர் 2025க்குள் நடத்தப்பட வேண்டிய பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இது இடம்பெறுகிறது.
21 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய, சிங்கப்பூர் முகவரியை அடையாள அட்டையில் கொண்டிருக்கும் சிங்கப்பூரர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். ஏதாவது ஓரு நடைமுறையில் உள்ள சட்டத்தின்கீழ் அவர் வாக்காளர் என்ற தகுதியற்றவராகத் தகுதிநீக்கம் செய்யப்படாமல் இருக்க வேண்டும்.
வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் தனது அடையாள அட்டை முகவரி வெளிநாட்டு முகவரிக்கு மாற்றப்பட்டிருந்தால், அவர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சிங்கப்பூர் தொடர்பு முகவரியை, வாக்களிக்கும் காரணத்துக்காக வைத்திருக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் பொதுப் பார்வைக்கு விடப்படும்போது, வாக்காளர்கள் பதிவேடுகளை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது குறித்த கூடுதல் விவரங்களை தேர்தல் துறை வழங்கும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் தேர்தல் தொகுதி ஒவ்வொன்றுக்கும் ஒரு வாக்காளர் பதிவேடு உண்டு. மொத்தமாக, 31 குழுத் தொகுதிகள், தனித் தொகுதிகளுக்கான வாக்காளர்கள் பதிவேடு, குடியரசில் உள்ள அனைத்து தகுதி பெற்ற வாக்காளர்களையும் உள்ளடக்கியிருக்கும்.
வாக்காளர் பதிவேடுகள் கடைசியாக 2024 ஜூலையில் சரிபார்த்து, சான்றளிக்கப்பட்டது.
கடந்த 2024 ஜூலை சான்றளிக்கப்பட்ட பதிவேடுகளின்படி மொத்தம் 2,715,187 வாக்காளர்கள் உள்ளனர். இது 2023 அதிபர் தேர்தலுக்கு முன் 2023 ஜூலையில் இடம்பெற்ற இறுதித் திருத்தத்தின் 2,709,455 என்ற எண்ணிக்கையைவிட 5,732 அதிகம்.
2020 ஏப்ரலில் சான்றளிக்கப்பட்ட பதிவேடுகளின்படி 2,653,942 வாக்காளர்கள் இருந்தனர். 2020 ஜூலை மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
2015ல், செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த தேர்தலுக்கு முன்னதாக ஏப்ரல் மாதத்தில் பதிவேடுகள் சான்றளிக்கப்பட்டன.
2011ல் பிப்ரவரி 22 பதிவேடுகள் சான்றிதழ் பெற்றது. மூன்று மாதங்களுக்குள் அவ்வாண்டு மே 7ல் பொதுத்தேர்தல் நடந்தது.