உலகச் செல்வந்தர்களிடையே ஆக அதிக வாழ்க்கைச் செலவினத்தைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
வலுவான நாணய மதிப்புடன், முதலீட்டாளர்கள் நாடும் நிலைத்தன்மை, மூலதனத்திற்கான பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதால், நான்காம் ஆண்டாகச் சிங்கப்பூர் அந்த இடத்தைப் பிடித்துள்ளது.
வாழ்க்கையில் நிதி நிலை நீடித்திருப்பதை ஆய்வு செய்யும் செல்வந்தர்கள் செலவை மட்டும் வைத்து அவர்கள் வாழ விரும்பும் நகர்களைத் தேர்வு செய்வதில்லை.
நிலைத்தன்மை, வாழ்க்கைத் தரம், வரவு செலவுக்கு இடையிலான சமநிலை ஆகியவற்றை வழங்கும் நகரங்களையே அவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
இதன் விவரங்கள் 2026க்கான ஜூலியஸ் பேயர் உலகளாவிய நிதி, வாழ்க்கைமுறை அமைப்பு செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
எந்தெந்த சொத்துகளை எங்கு வாங்கவேண்டும் என்று செல்வந்தர்கள் முடிவெடுக்கும்போது, சிங்கப்பூர் இயற்கையான தேர்வாக அமைந்துவிடுகிறது என்று அந்த அமைப்பின் சிங்கப்பூர் கிளை மேலாளர் யீ கிம் டான் கூறினார்.
சிங்கப்பூர் வழங்கும் நிலைத்தன்மை, சட்டத்தின்மீதான வலுவான நம்பிக்கை, பாதுகாப்பான சூழல் போன்றவை நீண்டநாள் திட்டமிடுவோருக்கு சிறந்த, மதிப்புமிக்க விழுமியங்களாக உள்ளன.
பல செல்வந்தர்களுக்கு மூலதனங்களை முதலீடு செய்ய, பல்வேறு பரந்த வட்டாரங்களுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல சிங்கப்பூரும் விளங்குகிறது எனவும் அவர் விளக்கினார்.
சுவிஸ் வங்கியின் வாழ்க்கைமுறை குறியீட்டில் சிங்கப்பூர் உச்சத்தில் இடம்பெற்றுள்ளது. குடியிருப்புச் சொத்துகளிலும், வாகனங்களின் விலையிலும் அதிக செலவு பதிவுசெய்யப்பட்டன. அமெரிக்க டாலருக்கு நிகராக சிங்கப்பூர் வெள்ளியின் வலிமையும் செலவினங்கள் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.
இருபது சொகுசுப் பொருள்களையும் சேவைகளையும் 25 நகரங்களில் ஜூலியஸ் பேயர் வாழ்க்கைமுறைக் குறியீடு ஆய்வு செய்கிறது. தனியார் பள்ளிக் கட்டணம், சுகாதாரச் செலவு, குடியிருப்புச் சொத்துகள், வாகனங்கள் ஆகியன அந்தப் பட்டியலில் உள்ளடங்கும். 2025 நவம்பர், 2026 மார்ச் ஆகிய இரண்டு மாதங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
உலகிலேயே கார்களை வாங்க ஆக அதிகமாகச் செலவாகும் நாடாக சிங்கப்பூர் தொடர்ந்து இருந்து வருகிறது. விலை மதிப்புமிக்கக் குடியிருப்புகளை வாங்குவதில் சிங்கப்பூர் மூன்றாம் நிலையில் உள்ளது.

