சிங்கப்பூரில் இப்போதைய கொவிட்-19 அலை உச்சத்தைக் கடந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருவாரங்களுக்குமுன் நாளொன்றுக்கு 4,000 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டது என்றும் இப்போது அது ஏறத்தாழ 3,000ஆகக் குறைந்துவிட்டது என்றும் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
கூடுதலாக பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடுகள் எதையும் விதிக்காமலேயே இப்போதைய தொற்று அலையை சிங்கப்பூர் எதிர்கொண்டு வருகிறது.
சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் கொவிட்-19 தடுப்பூசிகளைத் தொடர்ந்து போட்டுக்கொண்டால் மட்டுமே இந்நிலை தொடர்வது சாத்தியம் என்று திரு ஓங் சொன்னார்.
தடுப்பூசிகள், கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசிகள் மூலமாக மக்களின் மீள்திறன் வலுப்பட்டுள்ளது என்றார் அவர்.
அதே நேரத்தில், தொடர்ந்து மேம்பட்ட மீள்திறனைக் கொண்டிருக்க சுகாதார அமைச்சின் அண்மைய பரிந்துரைகளின்படி தடுப்பூசி போட்டுக்கொள்வதை மக்கள் தொடர்வது மிகவும் முக்கியம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டு முதல் நான்கு மாதத் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, 60 மற்றும் அதற்குமேல் வயதுடையோரை கொவிட்-19 தொற்றினால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு தொடர்கிறது என்று திரு ஓங் குறிப்பிட்டார்.