சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே சட்டவிரோதப் போக்குவரத்துச் சேவை வழங்குவதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் வாகனம் ஒன்றை மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக ஜோகூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது நவம்பர் 5ஆம் தேதி வாகனம் பிடிபட்டது.
வாகனத்தில் வழக்கம்போல மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் எல்லை தாண்டிய போக்குவரத்துச் சேவையை ஓட்டுநர் வழங்குவதாகத் தெரியவந்தது.
ஜோகூர் சாலைப் போக்குவரத்துப் பிரிவு ஃபேஸ்புக், டிக்டாக் ஆகியவற்றில் பதிவேற்றிய பதிவில் எம்பிவி எனும் பல பயன் வாகனத்தில் இரண்டு பயணிகள் அமர்ந்திருந்ததைக் காண முடிகிறது.
எல்லை தாண்டி போக்குவரத்துச் சேவைகளை வழங்க குறிப்பிட்ட அந்த வாகனத்துக்கு உரிமம் இல்லை என்று முதற்கட்ட சோதனையில் புலப்பட்டது.
இதற்குமுன் இதேபோன்ற சம்பவம் அக்டோபர் 23ஆம் தேதி நிகழ்ந்தது.
அப்போது பிடிபட்ட வாகனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மூன்று பெண் பயணிகள் இருந்தனர்.

