ஜோகூர் பாரு: ஏப்ரல் 3ஆம் தேதி பிற்பகல் 3.40 மணியளவில் ஜாலான் துன் அப்துல் ரசாக் பகுதியில் சாலை விபத்து நேர்ந்தது என்று ஜோகூர் பாரு தெற்கு மாவட்டக் காவல்துறை தெரிவித்தது.
பயண முகவராகப் பணிபுரியும் அந்த ஆடவர் திடீரென சாலையைக் கடக்க முயன்றதால் அவ்வழியே சென்ற ‘கிராப்’ வாடகை வாகன ஓட்டுநரால் காரை நிறுத்தமுடியவில்லை என்று காவல்துறை கூறியது.
விபத்தால் ஆடவரின் கை, கால், தலைப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன.
சமூக ஊடகங்ளில் வெளியான காணொளியில் அந்த ஆடவர் பாதசாரிகளுக்கான சாலைக் கடப்பு இல்லாத இடத்தில் சாலையைக் கடப்பது தெரிகிறது. அவருக்குச் சற்று அருகிலேயே நடை மேம்பாலம் ஒன்று இருப்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
காயமடைந்த ஆடவர் தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும்; அனுமதியற்ற இடங்களில் சாலையைக் கடந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

