சிங்கப்பூரின் 58வது தேசிய தினத்தைக் கொண்டாடும் விதமாக ஜூலை 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை சிங்கப்பூரர்கள் தேசியக் கொடியைக் கட்டடங்களில் கட்டலாம்.
வீடுகள், அலுவலகங்கள், குடியிருப்புப் பேட்டைகள் போன்ற கட்டடங்களில் கொடிகளைக் கட்டலாம் என்று கலாசார, சமூக, இளையர் அமைச்சு வெள்ளிக்கிழமை தகவல் வெளியிட்டது.
இந்த காலகட்டத்தில் கொடிக்கம்பங்கள் இல்லாமலும் இரவுநேரத்தில் கொடிகளுக்கு வெளிச்சம் தரும் கருவிகள் இல்லாமலும் கட்டலாம் அல்லது பறக்கவிடலாம் என்று அமைச்சு கூறியது.
கிழிந்த அல்லது சேதமடைந்த கொடிகளைக் கட்ட வேண்டாம் என்று அது நினைவுறுத்தியது.
சேதமடைந்த கொடிகளை கறுப்புப் பையில் வைத்து பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு அமைச்சு கேட்டுக்கொண்டது.
தேசியக் கொடி சிங்கப்பூரின் ஒற்றுமையையும் மீள்திறனையும் எடுத்துக்காட்டும் சின்னம். அதை சிறந்த முறையில் பயன்படுத்தி, உரிய மரியாதையைத் தரவேண்டும் என்று அமைச்சு கூறியது.
தேசியக்கொடியைப் பறக்கவிடுதல், கட்டுதல் தொடர்பான மேல்விவரங்களுக்கு https://go.gov.sg/nationalflag என்ற இணைய முகவரியை நாடலாம்.

