புவிசார் அரசியல், உலகப் பொருளியல் ஆகியவற்றில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், சிங்கப்பூர் உற்பத்தித் துறையில் நம்பிக்கை நிலவுவதாக சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கருத்துக்கணிப்பு சுட்டியது.
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் உற்பத்தியாளர்களில் 21 விழுக்காட்டினர் வியாபார நிலைமைகள் மேம்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், 5 விழுக்காட்டினர் வாய்ப்புகள் மந்தமாக இருக்கும் என்றும் கணிப்பு வெளிப்படுத்தியது. இதன்படி, 2024ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிட, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் வணிக வாய்ப்புக் குறித்து 16 விழுக்காடு நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன என்று அது கூறியது.
பல்வேறு தொழில்துறைகளில், மின்னணுக் குழுமம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. 25 விழுக்காடு மின்னணுவியல் நிறுவனங்கள், ஜூன் 2025 வரையிலான ஆறு மாதங்களுக்கு சிறந்த வணிகச் சூழல் இருக்கும் என்று கணித்துள்ளன.
“இந்த நம்பிக்கை பெரும்பாலும் குறைக்கடத்தி பிரிவினால் உண்டாக்கப்படுகிறது. அமெரிக்க வர்த்தகக் கொள்கையைச் சார்ந்து, நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளில் வலுவான வளர்ச்சி சில்லு தேவையை தொடர்ந்து தக்கவைத்திருக்கும்,” என்று ஆய்வு கூறியது.
சேவைத் துறையின் வணிக எதிர்பார்ப்புகளையும் சிங்கப்பூர் புள்ளி விவரத் துறை வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) வெளியிட்டது. 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் 17 விழுக்காடு நிறுவனங்கள் வணிக நிலைமை குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும் 10 விழுக்காடு நிறுவனங்கள் சரிவை எதிர்நோக்குவதாகவும் அது தெரிவித்தது.

