சட்டவிரோதமாக எல்லை தாண்டிய வாகனச் சேவைகளை வழங்கிய ஆறு ஓட்டுநர்கள், நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.
நிலவழிச் சோதனைச்சாவடிகள், சாங்கி விமான நிலையம், இயூ டீ ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது அந்த ஓட்டுநர்கள் பிடிபட்டனர்.
தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கமும் தேசிய டாக்சி சங்கமும் அளித்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்க நடவடிக்கை நடத்தப்பட்டது. பிடிபட்ட ஆறு ஓட்டுநர்களின் வாகனங்களையும் ஆணையம் பறிமுதல் செய்தது.
கடந்த 2025 ஜூலை முதல் இதுவரை 5,400க்கும் அதிகமான வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதில் விதிகளை மீறிய மொத்தம் 247 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார்.
ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்ரி, ஃபாரஸ்ட் சிட்டி, கூலாய், செனாய் ஆகிய இடங்களுக்குச் செல்ல கிராப் செயலி மூலம் உரிமம்பெற்ற எல்லை தாண்டிய வாகனச் சேவைகளையோ சிங்கப்பூரின் எந்தப் பகுதியிலிருந்தும் தங்களை அழைத்துச் செல்லக்கூடிய சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட டாக்சிகளையோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆணையம் பயணிகளுக்கு நினைவூட்டியது.
