சிங்கப்பூரர்கள் தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் ‘டீப் ஃபேக்’ என்னும் போலி காணொளிகளில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நினைவூட்டியுள்ளார்.
மேலும், முதலீடு தொடர்பாக தாம் பேசுவது போலுள்ள காணொளி போலியானது என்றும் அதனால் ஏமாற வேண்டாம் என்றும் மூத்த அமைச்சர் லீ எச்சரித்துள்ளார்.
அது தொடர்பாக திரு லீ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
“ஒரு முதலீடு மூலம் பெரும் லாபத்தை ஈட்ட முடியும் என்று நான் சொல்வது போல் ஒரு காணொளி வெளியாகியுள்ளது. அதை நம்ப வேண்டாம்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.
“தொழில்நுட்பத்தின் மூலம் மோசடிக்காரர்கள் போலியான காணொளிகளைக் கிட்டத்தட்ட உண்மையான காணொளிகள் போல் உருவாக்கியுள்ளனர்.
“2023ஆம் ஆண்டு தேசிய தினத் கூட்டத்தில் நான் பேசிய காணொளியை எடுத்து அதற்கான ஒலியையும் வாய் அசைவுகளையும் மாற்றி மோசடிக்காரர்கள் காணொளியைத் தயாரித்து உள்ளனர்,” என்றார் அவர்.
இது மிகவும் கவலைக்குரிய ஒன்று என்ற அவர், மக்கள் அது தாம்தான் என்று எண்ணி மோசடிக்கு ஆளாகலாம் என்று வருத்தம் தெரிவித்தார். மக்கள் எப்போதும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.