ஷென்ஷென்: சீனாவின் மின்சார வாகனத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பிஒய்டி நிறுவனம், அடுத்த ஆண்டு முதல் சிங்கப்பூர் உட்பட உலக நாடுகளில் விவேகமான ஓட்டும் அம்சங்களைப் புகுத்த திட்டமிட்டுள்ளது.
தானாக காரை நிறுத்துவது, கைப்பேசி செயலி வழியாக தொலைவிலிருந்து வாகனத்தை நிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் புகுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வாகன விற்பனைப் பிரிவின் பொது நிர்வாகி லியு ஸியுலியாங் தெரிவித்தார்.
இந்தத் தானியக்க முறை வாகனத்தில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் செயல்படுத்தப்படும்.
முதலில் உண்மையான சாலைகளில் ஓட்டுநர் உதவியுடன் தானியக்க முறையை சோதிப்பது அவசியம் என்று லியு குறிப்பிட்டார்.
உள்ளூர் பயனீட்டாளர்களின் பழக்கவழக்கங்கள், நெடுஞ்சாலை நிலவரங்கள் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கும் மேலாக ஒவ்வொரு நாட்டிலும் ஓட்டுநர் இல்லாத சட்ட, விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“எல்லாமே சரியாக வந்தால் குறுகிய காலத்தில் புதிய தானியக்க அம்சங்களை சந்தைகளுக்குக் கொண்டு வருவோம்,” என்றார் அவர்.