ரயில் பெட்டியின் கீழ்த் தளத்திலிருந்து திடீரெனப் புகை எழுந்ததால் செம்பவாங் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக் காரணம் கருதி ரயிலில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவம் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) மாலை நடந்தது. அது தொடர்பான படங்களும் காணொளிகளும் சமூக ஊடகத்தில் உலாவி வருகின்றன.
“செம்பவாங் ரயில் நிலையத்திற்குள் ரயில் வந்தவுடன் ஒரு பெட்டியின் அடியிலிருந்து புகை எழுந்தது. அதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்,” என்று சம்பவத்தை நேரில் பார்த்த கேத்ரின் ஸ்டாம்ப் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து எஸ்எம்ஆர்டி நிறுவனத்திடம் ஸ்டாம்ப் பேசியது.
“வடக்கு-தெற்கு ரயில் பாதையில் இரவு 8.10 மணிவாக்கில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த ரயிலின் ஒரு பெட்டியில் புகை எழும்பியது. முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட ரயில் பெட்டியின் ‘பிரேக்’கில் பிரச்சினை இருந்தது தெரிய வந்துள்ளது. சக்கரத்தில் பிரேக் தொடர்ந்து அழுத்தியிருந்ததால் புகை எழுந்தது,” என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
இச்சம்பவத்தால் ரயில் சேவைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. பயணிகள் யாருக்கும் மருத்துவ உதவிகள் தேவைப்படவில்லை.

