சிங்கப்பூர் ஆற்றில் முதல்முறையாகச் சூரிய மின்சக்தியின் மூலம் இயங்கும் படகுகள் வலம்வரவுள்ளன.
மொத்தம் 10 படகுகள் சவாரிகளை வழங்கவுள்ளன. அவற்றில் இரண்டு படகுகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் சேவையாற்ற உள்ளன.
மற்ற எட்டுப் படகுகளை மாதம் ஒன்று என்ற அடிப்படையில் சேவையில் இறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படகுகளை உள்ளூர் கப்பல் தயாரிப்பு நிறுவனமான பைசிஸ் (Pyxis) தயாரிக்கிறது. சூரிய மின்சக்தியின் மூலம் இயங்கும் படகுகளின் பெயர்கள் பைசிஸ் ஆர் (Pyxis R) படகுகள் என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாண்டு இறுதிக்குள் அந்த10 படகுகளும் சிங்கப்பூர் ஆற்றில் சேவையாற்றும்.
தற்போது வாட்டர்பிஸ் (WaterB’s) நிறுவனத்தின் 20 படகுகள் படகு சேவைகளை வழங்கி வருகின்றன. அவற்றில் 10 படகுகளின் இடங்களை இந்த புதிய மின் படகுகள் நிரப்பும்.
ஒவ்வொரு படகிலும் உள்ள சூரிய தகடுகள் மூலம் ஒரு நாளுக்கு 22 கிலோவாட்மணி (kilowatt-hour) மின்சாரம் தயாரிக்கப்படும். 10 படகுகளில் கிடைக்கும் மின்சாரம் மூலம் 20 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் ஒருநாள் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும் என்று பைசிஸ் தெரிவித்தது.
ஆற்றில் உள்ள படகுகள் பெரும்பாலான நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும்தான் சேவைகளை வழங்கும். அதனால் பிற்பகல் நேரங்களில் கரையில் நிற்கும்போது படகுகளால் சூரியசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் படகுகளுக்கான மின்சாரத் தேவை மிகவும் குறைவு, அதனால் பலமடங்கு மின்சாரம் மிச்சம் என்றும் பைசிஸ் நிறுவனம் கூறியது.

