சிங்கப்பூரில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் 88,400 ஆக உயர்ந்துள்ளது. இது 2024ல் 87,200 ஆகவும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2015ல் 41,200 ஆகவும் இருந்தது.
ஒப்புநோக்க, கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட குடும்பப் போக்குகளின் அறிக்கை இதனை விவரித்தது.
குடும்பங்களின் பிணைப்பு இன்னும் வலுவாகவே உள்ளது.
ஆய்வில் பங்கேற்ற 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களில் 95.2 விழுக்காட்டினர் தங்களின் பெற்றோரைப் பராமரிப்பது தங்களது பொறுப்பு என்று ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், 89.6 விழுக்காட்டினர் தங்களுக்கு நெருக்கமான குடும்பங்கள் இருப்பதாகத் கூறியுள்ளனர்.
இருப்பினும், இவர்கள் மொத்த மூத்தோரில் 11.5 விழுக்காட்டினர் என்ற அளவிலேயே உள்ளனர்.
மேலும் பெரும்பான்மையான மூத்தோர் இன்னும் தங்களின் துணையுடன் அல்லது பிள்ளைகளுடன் தான் வசித்து வருகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.
எனினும், மூத்தோரைப் பராமரிப்போர் தங்களின் உடல்நலம், மனநலம் சமூக உறவுகளில் சில சவால்களைச் சந்திப்பதாகவும், மற்றவர்களை விடக் குறைந்த அளவே வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கொள்கை ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த முதன்மை ஆய்வாளர் மேத்யூ மேத்யூஸ் கூறுகையில், பராமரிப்பாளர் சோர்வாகவோ, சுமையாகவோ அல்லது தங்களுக்கு ஆதரவு இல்லை என்றோ உணரலாம்; வலுவான குடும்பப் பிணைப்புகள் இருப்பதால் பராமரிப்பாளர்களுக்கு உதவி தேவைப்படவில்லை என்று அர்த்தம் கொள்ளக்கூடாது என்று கூறினார்.
குறைந்த தூக்கம், தனிப்பட்ட நேரம் தவிர, பராமரிப்பாளர்களுக்கு சமூக நடவடிக்கைகள் குறைவாகவே இருக்கும் என்று சொன்ன அவர், “பல பராமரிப்பாளர்கள் தங்களுக்குப் பிரியமானவர்களைப் பராமரிப்பதில் தொடர்ந்து அர்த்தம், அன்பு மற்றும் நிறைவைக் காண்கிறார்கள்.
‘‘அவர்கள் அந்தப் பொறுப்பைச் சுமையாக உணர்ந்தாலும், அந்த உறவை இன்னும் ஆழமாக மதிக்கிறார்கள்,” என்றும் சொன்னார்.

