மத்திய கிழக்கில் தொடரும் போரால் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டவர் சிலருக்கு நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அத்தகையோர் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) ஓமானுக்கு விடப்படும் சிறப்பு விமானத்தில் பயணம் செய்யலாம் என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.
SQ8002 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு சாங்கி விமான நிலையத்திலிருந்து மஸ்கட் அனைத்துலக விமான நிலையத்துக்குப் புறப்படும். அவ்விமானத்தில் ஒவ்வொரு பயணச்சீட்டும் 600 வெள்ளிக்கு விற்கப்படுகிறது என்று வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு வயதை எட்டிய சிறாருக்குப் பயணச்சீட்டு வாங்கவேண்டும். அவர்களுக்கும் அதே விலையில் பயணச்சீட்டு விற்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் செல்ல சனிக்கிழமை (மார்ச் 7) ஒன்பது மணிக்குள் https://go.gov.sg/8mar-sgtomuscat என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்யவேண்டும். அவ்வாறு பதிவுசெய்தால் விமானத்தில் கட்டாயம் இடம் கிடைக்கும் என்று அர்த்தமாகாது என்று பயணத்துறைக் கழகம் குறிப்பிட்டது.
இந்த விமானச் சேவை, சிங்கப்பூரில் நிரந்தரமாக வாழாத வெளிநாட்டவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்று பயணத்துறைக் கழகம் கூறியது.

