சிங்கப்பூரில் நாய் துன்புறுத்துதல் தொடர்பான சம்பவங்கள் கடந்த ஆண்டு அதிகரித்தன என விலங்குவதைத் தடுப்புச் சங்கம் கூறியது.
அவ்வாண்டு 69 நாய் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்தன என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது சங்கம் தெரிவித்தது.
2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 202 நாய் துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்கள் குறித்து தங்களிடம் புகார் அளிக்கப்பட்டதாக அது மேலும் குறிப்பிட்டது.
2023ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களின் எண்ணிக்கையை கடந்த ஐந்தாண்டுகளில் புகார் அளிக்கப்பட்ட சம்பவங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அது மூன்றில் ஒரு பங்கு எனச் சங்கம் எடுத்துரைத்தது.
கடந்த ஆண்டுப் புகார் அளிக்கப்பட்ட சம்பவங்களில் ஒன்பது சம்பவங்கள் நாய்களுக்குப் பயிற்சி தரும் பயிற்சியாளர்கள் மீது புகார் செய்யப்பட்டவை.
செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை அடிக்காமல் மனிதநேய பயிற்சி முறைகளை மட்டும் பயன்படுத்தும் பயிற்சியாளர்களை அதற்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி சங்கர் கூறினார்.