ஐப்பானின் தோக்கியோ நகரை உலுக்கிய ‘பாஸை’ புயலால் சிங்கப்பூருக்கும் தோக்கியோவுக்கும் இடையிலான குறைந்தது நான்கு விமானச் சேவைகளின் பயண நேரம் மாற்றப்பட வேண்டியிருந்தது.
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ‘ஜெஎல்712’ விமானம் காலை 8.10 மணிக்கு தோக்கியோவின் நரிட்டா அனைத்துலக விமான நிலையத்திற்குப் புறப்படவேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் அது 10 மணிக்குப் புறப்பட்டது. அதே போல, ‘ஆல் நிப்பான் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் என்ஹெச்842 விமானம் இன்று காலை 11 மணிக்குப் பதிலாக இரவு 8.30 மணிக்கு சாங்கியைவிட்டு ஹனாயேடா விமான நிலையத்திற்குச் செல்லும்.
இதே போல ஹனாயேடா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குக் காலை 6.40 மணிக்குப் புறப்படவிருந்த என்ஹெச்843 விமானம், அதற்குப் பதிலாக இரவு ஏழு மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எஸ்கியூ639 விமானம் ஜப்பானிலிருந்து தாமதமாகப் புறப்படும் என்றும் அது சிங்கப்பூரைப் பிற்பகல் 4.37 மணிக்கு அடையும் என்றும் சாங்கி விமான நிலையத்தின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தோக்கியோவுக்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட எஸ்கியூ12 விமானமும் எஸ்கியூ632 விமானமும் தத்தம் பயண இடங்களை முறையே 20 நிமிடங்களும் 38 நிமிடங்களும் தாமதமாகச் சென்றடைந்தன.
தோக்கியோ நகரில் மின்சாரத் துண்டிப்பையும் போக்குவரத்துத் தடையையும் ஏற்படுத்திய இந்தப் புயலால், வீடுகளைவிட்டு வெளியேறும்படி 390,000 பேருக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.