ஈசூனில் மின்-ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற பிரெண்டன் லிம் சுன் சியன் எனும் 19 வயது இளையர், 12 வயது சிறுவன்மீது இடித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி மாலை 6 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து அதற்கு அடுத்த நாள் காலை 11 மணியளவில் போலிசில் புகார் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து லிம் கைது செய்யப்பட்டார்.
ஈசூன் ஸ்திரீட் 81ல் புளோக் 838க்கு அருகில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் மின்-ஸ்கூட்டர் ஓட்டினார். 12 வயது சிறுவன் அந்தப் பக்கமாக வந்தபோது, பிரெண்டனால் மின்-ஸ்கூட்டரை உடனடியாக நிறுத்தமுடியாமல் போனது.
அதனால், சிறுவனின் வலது கன்னத்தில் காயமேற்பட்டதுடன் பல் உடைந்து ரத்தம் கொட்டியது.
சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் ஒரு பல்லும் அகற்றப்பட்டது.
நேற்று பிரெண்டனுக்கு $2,000க்கு பிணை வழங்கப்பட்டது. அவர் அடுத்த மாதம் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரெண்டனுக்கு ஓராண்டு வரை சிறை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity