ஆடவர் ஒருவரின் காதலி கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி விபத்தில் மரணமடைந்தார். நேற்று அவரது மரணத்துக்குக் காரணமான ஆடவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் தமது தேசிய சேவை கடமை முடிந்த பிறகு 20 வயது குமாரி நூர் டயானா லிம்மைத் திருமணம் புரிந்துகொள்ள 23 வயது டானியல் அண்டிகா மொஹ்மான் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் அவர் மரணமடைந்தார்.
குமாரி டயானாவின் மரணத்துக்குக் காரணமான டானியலுக்கு நேற்று $6,000 அபராதத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்களை ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி இரவு 10 மணிக்கு தீவு விரைவுச்சாலையில் அந்த ஜோடி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
ஏற்கெனவே, நிகழ்ந்த மற்றொரு விபத்தில் மற்ற இரு வாகனங்கள் மோதிக்கொண்டன. அவற்றுக்குப் பின்னால் சென்ற ஒரு லாரி மோதலைத் தவிர்க்க திடீரென நிறுத்தியது. லாரிக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த போதிய நேர அவகாசம் இல்லாததால், அது லாரியின் பின்புறம் மோதியது.
இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.
பின்னால் 10 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருந்த பேருந்து, சாலையில் விழுந்த குமாரி லிம்மின் மீது ஏறியது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குமாரி லிம், கடும் காயங்கள் காரணமாக அன்று இரவு 11.10 மணிக்கு மரணமடைந்தார்.
டானியலுக்கும் விபத்தில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இருப்பினும், கவனக்குறைவால்தான் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அபராதத்தை ஆறு மாதங்களில், மாதத்துக்கு $1,000 வீதம் தவணை முறையில் செலுத்த நீதிபதி அனுமதியளித்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity