மது அருந்திவிட்டு, தங்களது ஒன்பதாவது மாடி வீட்டிலிருந்து கீழே குதித்துவிடப்போவதாக சத்தமிட்டுக்கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்ட அவ்விருவரும் அதிகாரிகள் கோரியும் கதவைத் திறக்கவில்லை.
அங்கு வசித்த ஆணும் பெண்ணும் திருமணமாகாதவர்கள் என்றும் ஜாலான் புக்கிட் மேராவின் புளோக் 3ல் உள்ள அந்த வீட்டில் சுமார் பத்தாண்டுகளாக அவர்கள் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.
அவர்களில், 55 வயதான ஆடவர் வேலைக்குச் செல்வதில்லை என்றும் 52 வயதான பெண் துப்புரவு பணி செய்வதாகவும் அக்கம்பக்கத்தார் குறிப்பிட்டனர்.
இருவரும் சேர்ந்து சன்னல் வழியாக கீழே குதித்துவிடலாமென்று அந்தப் பெண்ணைப் பார்த்து ஆடவர் கத்தியதாக ஷின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக புத்தாண்டு தினத்தன்று இரவு சுமார் 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கின் கீழே காற்றடைத்த உயிர்காப்புத் தொகுப்பு அமைக்கப்பட்டது.
பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவினர் அந்தக் குடியிருப்பின் சன்னல்களில் பாதுகாப்பு வலைகளை அமைத்ததையடுத்து கீழே குதிக்கும் எண்ணத்தை அவர்கள் கைவிட்டனர்.
அரசாங்க ஊழியர்கள் தங்களது கடமையை ஆற்றுவதை பலவந்தமாகத் தடுத்ததற்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity