சிங்கப்பூரில் வந்திறங்கிய மேலும் இருவருக்கு வூஹான் கொரோனா கிருமித்தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு இன்று (பிப்ரவரி 1) மாலை தெரிவித்தது.
இவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் அந்தக் கிருமி தொற்றியதாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
ஆகக் கடைசியாக உறுதி செய்யப்பட்ட இருவரும் வூஹான் சென்று திரும்பியவர்கள் என்றும் சிங்கப்பூர் சமூகத்தில் கொரோனா கிருமி பரவியதற்கான அடையாளம் எதுவும் இல்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
“புதிதாக கிருமி தொற்றியதாகக் கண்டறியப்பட்ட இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
“இதற்கு முன்பு உறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட 16 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது. அவர்களில் யாருக்கும் மோசமான நிலைமை ஏற்படவில்லை. அவர்களில் பொரும்பாலானோர் தேறி வருகின்றனர்,” என்று சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
“17வது நபராக இன்று உறுதிசெய்யப்பட்டவர் 47 வயது சிங்கப்பூர் பெண்மணி. ஜனவரி 30ஆம் தேதி வூஹானில் இருந்து ஸ்கூட் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர். வூஹானில் விமானத்தில் ஏறியபோது அவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறி தென்படவில்லை. சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கியதும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்,” என்று அமைச்சு விளக்கி உள்ளது.
அந்தப் பெண்ணுக்கு கொரோனா கிருமி தொற்றியது வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் உறுதிசெய்யப்பட்டதாகவும் அந்த மையத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட 18வது நபர் சீனாவைச் சேர்ந்த 38 வயது பெண். வூஹானில் இருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி சிங்கப்பூர் வந்த அவருக்கு கொரோனா கிருமி தொற்று இருப்பது இன்று பிற்பகல் 2 மணிவாக்கில் உறுதிசெய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தில் அந்தப் பெண்ணும் தனிமைப்படுத்தப்பட்டார்.
#வூஹான் #தமிழ்முரசு #சிங்கப்பூர்