சிங்கப்பூரில் முதல் முறையாக உள்ளூரிலேயே கொரோனா கிருமி பரவிய சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் கிருமித் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பொது இடங்களைத் தூய்மையாக்கும் பணிகள் மேம்படுத்தப்படும். சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கிருமித் தொற்றுக்கு எளிதில் ஆளாகக்கூடிய குழந்தைகள் மற்றும் முதியோர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்று அரசாங்கம் இன்று (பிப்ரவரி 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
உதாரணமாக, மாணவர்களிடையே கிருமித் தொற்று ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, பள்ளிகளில் வெவ்வேறு நேரங்களில் இடைவேளை விடப்படுவது அமலாக்கப்படும்.
பள்ளி முகாம்கள் மற்றும் ஒன்று கூடல் போன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும். முதியோர் பராமரிப்பு நிலையங்களும் வெளி நடவடிக்கைகளையும் பெருமளவில் ஒன்றுகூடும் நடவடிக்கைகளையும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூரிலேயே கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ள நால்வரைப் போன்ற மற்றவர்களையும் கண்டுபிடித்து அதிகாரிகள் தொடர்பு கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த வாரத்திலிருந்து நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ‘2019-nCoV’ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று சுகாதார அமைச்சு கூறியது.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுவாசக் காற்று மூலம் கிருமி பரவலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் கிருமி மேலும் பரவாமல் இருக்க பொதுமக்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு தங்களைத் தாங்களே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்களும் கடைகளும் தங்களுடைய இடங்களை குறிப்பாக மக்கள் நடமாட்டமுள்ள இடங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கொரோனா கிருமி தொற்றிய 18 சம்பவங்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் ஏற்பட்டது.
இந்தச் சம்பவங்களில் 16 சீனர்களும் இரண்டு சிங்கப்பூரர்களும் ஹுபெய் மாநில தலைநகரான வூஹான் நகருக்குச் சென்று சிங்கப்பூர் திரும்பியவர்கள்.
அவர்களில் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சு தெரிவித்தது.
சென்ற திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் பேசிய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், கொரோனா கிருமி தொடர்ந்து பரவி வருவதால் சிங்கப்பூரில் பல அடுக்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஹுபெய் மாநிலத்துக்கான பயணங்களையும் தவிர்க்குமாறு சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் சீனாவுக்குச் சென்றவர்கள் மற்றும் சீன நாட்டின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சிங்கப்பூரில் நுழையத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற தடையை மற்ற நாடுகளும் விதித்துள்ளன.
#தமிழ்முரசு#சிங்கப்பூர்#கொரோனா