சிங்கப்பூரில் 'வளர்ச்சியற்ற வெளிநாட்டு ஊழியரணி'யின் சாத்தியம் குறித்து வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங்குக்கும் எதிர்த்தரப்பு பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்குக்கும் இடையே இன்று (பிப்ரவரி 4) நாடாளுமன்றத்தில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியரணியில் வளர்ச்சி இல்லாமல் செய்வது கோட்பாட்டளவில் சாத்தியம் என்றாலும் பொருளியலில் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்காமல் அதை நிறைவேற்ற முடியாது என்று திரு சான் கூறினார்.
இதனால், முதலீடுகள் இல்லாமல் போகும், நிறுவனங்கள் மூடப்படும், சிங்கப்பூரர்களுக்கு வேலைகள் இல்லாமல் போகும் போன்றவை அந்த பின்விளைவுகள் என்று அமைச்சர் சுட்டினார்.
“அடுத்த பத்தாண்டுகளில் உள்ளூர் ஊழியர்களின் அளவு உச்சத்தைத் தொடும் என்பதால் வெளிநாட்டு ஊழியரணியின் வளர்ச்சியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“தற்போதுள்ள விகிதத்தைத் தொடர்ந்தால் உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையையும் நாம் அதிகரிக்க வேண்டும். உள்ளூர் விகிதம் சரியும்போது வெளிநாட்டு ஊழியர்களின் விகிதமும் சரிய வேண்டும்,” என்றும் திரு சான் விளக்கினார்.
எப்போதுமே வெளிநாட்டு ஊழியரணியில் வளர்ச்சி இருக்கக்கூடாது என்று பாட்டாளிக் கட்சி பல ஆண்டுகளாகக் கூறி வருகிறது என்றார் திரு சான்.
அதற்குப் பதிலளித்த திரு பிரித்தம், 2013 மக்கள் தொகைக்கான வெள்ளை அறிக்கையின்போது தமது கட்சி நிபந்தனையுடன் இதை வலியுறுத்தியது என்றார்.
உள்ளூர் ஊழியரணி ஆண்டுக்கு ஒரு விழுக்காடு என்ற விகிதத்தில் வளர்ச்சி காணும்போது, வெளிநாட்டு ஊழியரணியில் பூஜ்யம் வளர்ச்சியைக் கொண்டு வர முடியுமா என்று அப்போது தமது கட்சி கேள்வி எழுப்பியது என்றார் திரு பிரித்தம்.
திரு சான் பதிலளிக்கையில், “ஆண்டுக்கு ஒரு விழுக்காடு உள்ளூர் ஊழியரணி வளர்ச்சி என்பது உறுதி செய்யப்பட்டது அல்ல. அது உலகச் சூழலையும் இதர சூழல்களையும் பொருத்துள்ளது. உள்ளூர் பொருளியலையும் அது பாதிக்கக்கூடும்,” என்றும் விவரித்தார்.
#தமிழ்முரசு#வெளிநாட்டுஊழியரணி