சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ள நிலையில் கொரோனா கிருமிப் பரவல் எச்சரிக்கை ஆரெஞ்சு வண்ணத்தை எட்டியுள்ளது. அதனால், முடிந்தால் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள், கூட்டங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இன்று இரவு 11.30 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தொடங்கும் தைப்பூசத் திருவிழா நாளை இரவு வரை நீடிக்கும்.
கிருமிப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தைப்பூசத் திருவிழா ஏற்பாட்டுக் குழு எடுத்துள்ளது. உடல்நலமில்லாதவர்கள் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும் தேங் ரோடு தண்டாயுதபாணி கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆகியவற்றுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்து அறக்கட்டளை வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்:
* ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தின் வாயில்களில் உடல் வெப்பநிலைமானிகள் வைக்கப்பட்டுள்ளன.
* தைப்பூச ஊர்வலப் பாதையில் சில இடங்களிலும் கோயில்களிலும் முகக்கவசங்களும் கிருமிநாசினிகளும் வைக்கப்பட்டுள்ளன.
* ஊர்வலம் தொடங்கக்கூடிய ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சவர்க்காரத்துடன் கூடிய புதிய கை கழுவும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* கழிவறைகள், பதிவு செய்யும் இடங்கள், கட்டணம் செலுத்தும் இடங்கள் போன்ற பொதுப் பகுதிகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படும்.
* கோயில் அலுவலர்களுக்கு தினமும் இருவேளை உடல்வெப்பநிலை கண்காணிக்கப்படும்.
* யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தொண்டூழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையப் பக்கம், ஃபேஸ்புக், தைப்பூச இணையப்பக்கம் ஆகியவற்றில் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழிபாடு குறித்த வழக்கமான தகவல்கள்:
இன்று இரவு 11 மணி முதல் நாளை விடிகாலை 3.00 மணி வரையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் வீடுகளிலேயே பால் குடத்தை ஆயத்தம் செய்து எடுத்து வருமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டிக்கொண்டுள்ளது.
பால் குடத்துக்கான சீட்டுகளை நாளை மாலை 4.00 மணி வரையில் பெருமாள் கோயிலில் வாங்கலாம். ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் ரேஸ் கோர்ஸ் சாலையில் நாளை விடிகாலை 3 மணி முதல் காவடிகளை இறக்கலாம்.
காலைக் காவடிகள் பெருமாள் கோயிலுக்குள் சனிக்கிழமை காலை 3 மணி முதல் 9 மணி வரை வரலாம். மாலைக் காவடிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையில் பெருமாள் கோயிலுக்குள் வரலாம்.
காவடி ஏந்துபவர்களுக்கு உதவ அலகு குத்துபவர்கள் 40 பேர் நாளை பெருமாள் கோயிலில் செயல்படுவர்.
அனைத்துக் காவடிகளும் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலைச் சென்றடைய வேண்டும்.
இசை
காவடிப் பாதையில் மொத்தம் 41 இடங்களில் காவடிச் சிந்து ஒலிபரப்பாகும்.
சார்ட்ஸ் ஸ்திரீட், பிராஸ் பசா கிரீன் ஆகிய இரண்டு இடங்களில் நேரடி உறுமி மேள இசை இடம்பெறும். ஹேஸ்டிங் ரோட்டில் நாதஸ்வரம்- தவில் இசை இடம்பெறும்.
காவடிப் பாதையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இசை ஒலிக்கலாம்.
காவடிகளுடன் செல்லும் பஜனை, பாடல் குழுக்கள் ஜால்ரா, கஞ்சிரா போன்றவற்றை வாசிக்கலாம். மேலும் ஒரு பாரம்பரிய இந்திய தாள வாத்தியத்தையும் வாசிக்கலாம்.
எனினும், அந்த தாள வாத்தியத்தை இந்து அறக்கட்டளை வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பெரியவர்கள் இன்று வரை தேங் ரோட்டில் உள்ள தியோசியூ கட்டட வளாகத்தில் முடி இறக்கலாம். நாளை குழந்தைகளுக்கு மட்டுமே முடி இறக்கப்படும்.
இன்று மாலை 5 மணிக்கு லயன் சித்தி விநாயகர் ஆலயத்தி லிருந்து தெண்டாயுதபாணி கோயி லுக்கு வெள்ளி ரதம் செல்லும்.
சாலை மூடல்
தைப்பூசத்தை முன்னிட்டு சில சாலைப் பகுதிகள் போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்படும்.
விவரங்களை www.onemotoring.com.sg என்ற இணையப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேல் விவரங்களுக்கு: இணையத் தளம்-www.thaipusam.sg, facebook.com/hinduendowments board, தொலைபேசி எண்- 65938408
#தமிழ்முரசு #தைப்பூசம் #கொரோனா #தடுப்புநடவடிக்கைகள்