மிதமாகத் தொடங்கி சில நாட்களில் கடுமையாகத் தாக்கும் கொரோனா கிருமித் தொற்று

மிதமாகத் தொடங்கி சில நாட்களில் கடுமையாகத் தாக்கும் கொரோனா கிருமித் தொற்று

3 mins read
5b307375-a1ef-484f-b07f-559e1214dc8f
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தேசிய தொற்று நோய்த் தடுப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் (இடது), சுகாதார அமைச்சின் தலைமைச் சுகாதார ஆய்வாளர் பேராசிரியர் டான் சோர் சுவான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மிதமான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் அசதி போன்ற பொதுவான அறிகுறிகளுடன் தொடங்கும் கொரோனா கிருமித் தொற்று தாக்கம், சுமார் ஒரு வாரத்துக்குப் பிறகு அதிகரிப்பதாக தேசிய தொற்று நோய்த் தடுப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர், இரண்டு, மூன்று தடவை அக்கம்பக்க மருத்துவர்களைப் பார்த்து சிகிச்சை பெற்ற பிறகே மருத்துவமனைக்குச் சென்றனர். ஏற்கெனவே கிருமித் தொற்று இருந்தவர்களுடன் நேரடித் தொடர்பில் இல்லாதவர்கள் அவர்கள்.

ஆனால், பொதுவான காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகளால் சிங்கப்பூரில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் அவதிப்படுவதுண்டு.

அதனாலேயே, கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இல்லாதவர்களுக்கு கிருமித் தொற்று இருப்பதைக் கண்டறிவது சிரமமானதாக உள்ளது.

கொரோனா கிருமி நுரையீரலைத் தாக்குவதற்கு முன்பாக சுமார் ஒரு வார காலத்துக்கு அவர்கள் மிதமான உடல்நலக் குறைவுடன் இருப்பர் என்று திருவாட்டி லியோ குறிப்பிட்டார்.

அதனால்தான், உடல்நலக் குறைவு இருப்பதாக உணர்கின்றவர்கள் வீட்டிலேயே இருப்பது நலம் என்கிறார் சுகாதார அமைச்சின் தலைமைச் சுகாதார ஆய்வாளர் பேராசிரியர் டான் சோர் சுவான். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் செல்ல நேரிட்டால் அவர்கள் முகக் கவசம் அணிவது அவசியம்.

கொரோனா கிருமித் தொற்று கண்ட சிலருக்கு மிதமான அறிகுறிகள் தோன்றும் நிலையில் சிலரது உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு மாறுபட்ட தன்மை நிலவுவதால், கிருமியின் தாக்கம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளப்படவில்லை என்றார் பேராசிரியர் லியோ.

உலக அளவிலான நிலைமையைக் கொண்டு பார்க்கும்போது, ஏற்கெனவே சுகாதாரப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் வயதானவர்களின் நோயெதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவருகிறது.

சிங்கப்பூரில் பல நோயாளிகளுக்கு அதிக உதவி தேவைப்படுகிறது, அல்லது அவர்களுக்கு அதிக அளவில் ஆக்சிஜன் வழங்குவதற்கான தீவிர பராமரிப்பு தேவைப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) நிலவரப்படி, ஆறு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர். ஆனால் அவர்கள் ஆறு பேரும் பல்வேறு வயதினர் என்றார் திருவாட்டில் இயோ.

முதலில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய ஆறு பேருக்கும் மிதமான அறிகுறிகளே இருந்தன.

நுரையீரல் செயல்பட முடியாத நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகள் சுவாசிப்பதற்கு இயந்திரங்களின் உதவி தேவைப்படுகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர், அதிக உதவி தேவைப்படுவோர் ஆகியோர் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது ஆக்சிஜன் அளவு, இதயம் மற்றும் சுவாச விகிதம், ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

அவற்றில் ஏதாவது மாறுபட்டால், மருத்துவ ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் கிடைக்கிறது.

கொரோனா கிருமித் தொற்றால் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவற்றைப் பாதுகாக்கும் வகையில் மருத்துவர்கள் மிகவும் கவனத்துடன் சிகிச்சை அளிப்பதாகவும் கூறப்பட்டது.

"சிறுநீரகம், ஈரல் போன்றவை ஒரு சிலருக்கே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தக் கிருமி முக்கியமாக நுரையீரலைத் தாக்குவதாகவும் அவர் சொன்னார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் தேறி சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாறியது நற்செய்தி!

#தமிழ்முரசு #கொரோனா

குறிப்புச் சொற்கள்