டிபிஎஸ் வங்கி ஊழியர் ஒருவருக்கு கொேரானா கிருமித்தொற்று காணப்பட்டதால் உடனடியாக, ‘நீ ஆன் சிட்டி டவர்-ஏ’ கட்டடத்தில் அந்த வங்கி செயல்படும் தளம் இன்று (பிப்ரவரி 18) காலை மூடப்பட்டது.
இவர், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது டிபிஎஸ் வங்கி ஊழியர் ஆவார்.
பாதிக்கப்பட்ட இடமும் தளமும் மூடப்பட்டதாகவும் மின்தூக்கி, கழிவறை, நடைபாதை போன்ற பொது இடங்கள் சுகாதார அமைச்சின் வழிகாட்டிதலின்படி கிருமிநாசினியைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டதாகவும் நீ ஆன் சிட்டி நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
“கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர் வேலை பார்த்த இடத்தைச் சுற்றி தடுப்புகள் போடப்பட்டன. கடைசியாக அவர் சென்ற பொது இடங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டன,” என்று பொது நிர்வாகியான லிம் யென் லி அறிக்கையில் குறிப்பிட்டார்.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்று வட்டாரமும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது,” என்றார் அவர்.
கடந்த வாரம் மரினா பே நிதி மையத்தில் உள்ள டவர் 3ன் 43வது மாடியில் செயல்படும் டிபிஎஸ் வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர், கிருமியால் பாதிக்கப்பட்டதால் அங்கு பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது 62 வயது ஊழியருக்கு கொரோனா கிருமித் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சு அறிவித்துள்ள அண்மைய சம்பவத்தில் 62 வயது ஊழியர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதிய சம்பவம், ஒரு வாரத்திற்கு முன்பு பாதிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையது என்று டிபிஎஸ் வங்கி தெரிவித்தது.
#தமிழ்முரசு #கொரோனா #டிபிஎஸ் #நீ ஆன் சிட்டி