அங்காடி நிலையங்கள் மற்றும் சந்தைகளில் கடைகள் வைத்திருப்போருக்கு வாடகைத் தள்ளுபடி கிடைக்க இருக்கிறது.
நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் நிறுவனங்களுக்கான ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவித்தார்.
தேசிய சுற்றுப்புற வாரியம் நிர்வகித்து நடத்தும் அங்காடி நிலையங்கள் மற்றும் சந்தைகளில் கடைகளை நடத்துவோர், ஒரு மாத வாடகைத் தள்ளுபடியைப் பெறலாம்.
இந்தத் தள்ளுபடி அதிகபட்சமாக $200 ஆக இருக்கும் என்று துணைப் பிரதமருமான திரு ஹெங் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான அல்லது அரசாங்கம் நிர்வகிக்கக்கூடிய வர்த்தகக் கட்டடங்களில் வாடகைக்கு இருப்போருக்கு அரை மாத வாடகைத் தள்ளுபடி கிடைக்கும்.
மூன்றாண்டுகளுக்கும் குறைந்த குத்தகையைப் பெற்று கடை நடத்துகின்ற, சொத்து வரிச் செலுத்தாத கடைக்காரர்கள் இந்தத் தள்ளுபடிக்குத் தகுதி பெறுவார்கள்.
மொத்தம் $45 மில்லியன் வாடகைத் தள்ளுபடியை அரசாங்கம் வழங்கும்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக தங்களுக்கு வியாபாரம் குறைந்துவிட்டது என்று உணவங்காடிக் கடைக்காரர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நிதி அமைச்சரின் வாடகைத் தள்ளுபடி அறிவிப்பு தங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
வரவுசெலவுத் திட்டத்தின் மேலும் விரிவான செய்திகளுக்கு நாளைய (பிப்ரவரி 19) தமிழ்முரசின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!
#BUDGET2020 #வாடகைத் தள்ளுபடி #தமிழ்முரசு