கொவிட்-19 கிருமித்தொற்று எதிரொலியாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் ஏற்பட்டுள்ள தாக்கத்தைச் சமாளிப்பதற்காக எஸ்ஐஏ, சில்க்ஏர், ஸ்கூட் என்ற அதனுடைய மூன்று விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் தங்களது சேவைகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன.
இம்மாதத்தில் இருந்து மே மாத இறுதி வரை 3,000க்கும் மேற்பட்ட, அதாவது 9.9% விமான சேவைகளை அந்தக் குழுமம் தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளதை அடுத்து இப்போதைக்கு புதிதாக எவரையும் வேலைக்கு எடுப்பதில்லை என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் முடிவுசெய்துள்ளது.
இப்போது 500க்கு மேற்பட்ட விமானச் சிப்பந்திகளும் கிட்டத்தட்ட 50 விமானிகளும் தேவைக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விருப்பப்படும் ஊழியர்கள் ஊதியமின்றி விடுப்பு எடுக்கலாம் என்றும் அக்குழுமம் கேட்டுக்கொள்ளலாம் என அறியப்படுவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி கூறுகிறது.
கொரோனா கிருமித்தொற்றை அடுத்து, குழுமம் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங், பணியாளர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், கிருமித்தொற்றால் எழுந்துள்ள சவால்களை வலிமையுடன் எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவைக்கு ஏற்றபடி விமான சேவைகள் இயக்கப்படும் என்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் திரு கோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், பணியாளர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
“பணியிடங்களில் தூய்மைப் பணிகள், உடல் வெப்பநிலைப் பரிசோதனை, வெப்பமானிகள், கைச்சுத்திகரிப்பான் மற்றும் தனிநபர் பாதுகாப்புச் சாதனங்கள் வழங்குதல், பெரிய அளவிலான நிறுவன நிகழ்ச்சிகளைத் தள்ளிப்போடுதல் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்,” என்று அவர் கூறினார்.
#எஸ்ஐஏ #சில்க்ஏர் #ஸ்கூட் #தமிழ்முரசு