இணைய வர்த்தகத் தளமான கெரோசலில் முகக்கவச விற்பனையில் மோசடி சம்பவங்கள் நிகழ்வது தொடர்பாக பல்வேறு புகார்கள் கிடைத்ததை அடுத்து, நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 கிருமி பரவி வரும் வேளையில், மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
"கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முகக்கவசங்கள் உள்ளிட்ட இதர பொருட்களுக்காக கட்டணம் செலுத்திய பிறகு பொருட்களைப் பெறாததால் வாடிக்கையாளர்கள் பலரிடமிருந்து புகார் கிடைத்தது," என்று போலிஸ் இன்று (மார்ச் 7) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றிவிட்ட பிறகு விற்பனையாளர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
அதையடுத்து, பிப்ரவரி 24ஆம் தேதிக்கும் 27ஆம் தேதிக்கும் இடையில் 19 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இரு ஆடவர்களும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
மோசடி குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கும் இடையே முகக்கவச விற்பனை தொடர்பான இணைய மோசடி சம்பவங்களில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் எண்மர் மீது மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர் #முகக்கவசம் #தமிழ்முரசு

