கிருமித்தொற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட, வீட்டில் தங்கி இருப்பதற்கான உத்தரவை மீறியதற்காக இரு அனைத்துலக மாணவர்களின் ‘ஸ்டூடண்ட் பாஸ்’ எனப்படும் மாணவர் அனுமதி அட்டை ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் இந்நடவடிக்கையை எடுக்கும்.
முதலாமவர், என்டியுவின் தேசிய கல்விக்கழகத்தில் பட்டமேற்படிப்பு படித்துவந்த அனைத்துலக மாணவர்.
வீட்டில் தங்கியிருப்பதற்கான உத்தரவை அவர் மீறியதோடு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் திரும்பத் திரும்ப பொய்யான தகவல்களைத் தந்தார்.
அடுத்தவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அனைத்துலகப் பரிமாற்ற மாணவர்.
வீட்டில் தங்கியிருப்பதற்கான நடைமுறை அறிமுகம் ஆகும் முன்னர் நடப்பில் இருந்த கட்டாய விடுப்புக்கான உத்தரவு அவருக்குப் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அந்த உத்தரவை அவர் மீறியதோடு பல்கலைக்கழகத்திடம் பயணம் தொடர்பான பொய்யான உறுதி மொழியை அளித்தார்.
உத்தரவுகளை மீறியதற்காக இந்த வெளிநாட்டு மாணவர்களின் அனுமதி அட்டை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்த அமைச்சு, “சிங்கப்பூர் சமூகத்தைக் காக்கவும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்குள் கிருமி பரவும் அபாயத்தைத் தடுக்கவும் வீட்டில் தங்கியிருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எல்லா மாணவர்களும் அதனைப் பின்பற்ற வேண்டியது அவசியம்,” என்று கூறி உள்ளது.
#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர் #NTU #NUS #StudentPass